கே.பி.யை பாதுகாப்பதற்காக தலையிடுவது, பிரச்சினைக்குரிய விடயம் - பொன்சேக்கா எச்சரிக்கை
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்களை பாதுகாப்பதற்காக சட்டமா அதிபர் தலையிடுவது பிரச்சினைக்குரிய விடயம் என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றில் ஜே.வீ.பி தாக்கல் செய்திருந்த வழக்கொன்றிற்கு சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் பிரதி மன்றாடியார் நாயகம் முன்னிலையான விடயம் தொடர்பிலே அவர் இதனை குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவராக கருதப்படும் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பீயை கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் ஜே.வீ.பி தாக்கல் செய்திருந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது ஒக்டோபர் மாதம் 28 ஆம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இதுவரை முன் எடுக்கப்படுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய கே.பீக்கு எதிராக வழக்கு தொடர போதுமான சாட்சியங்கள் இல்லையென சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.
கே.பீக்கு எதிராக முன் எடுக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன் எடுக்கப்படுவதாகவும், இதுவரை முன் எடுக்கப்பட்ட விசாரணைகளின் அறிக்கை அடுத்த வழக்கு விசாரணையின் போது முன்வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜே.வீ.பியினால் முன்வைக்கப்பட்டுள்ள மனுவின் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், இராணுவ தளபதி மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
பயங்கவராத நடவடிக்கைகளுக்கு நிதி சேகரித்தமை, போதைப்பொருள் வர்த்தகம், ஆயுதங்கள் சேகரிப்பு, இந்திய முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி உள்ளிட்ட 193 குற்றச்சாட்டுக்களுக்கு குமரன் பத்மநாதன் பொறுப்புக் கூற வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கே.பீ கைது செய்ய காவற்துறை மா அதிபரை வலியுறுத்தி இடைக்கால தடையை பிறப்பிக்குமாறு மனுதாரர் நீதிமன்றில் கோரியிருந்தனர்.
Post a Comment