ரணில் விக்கிரமசிங்கவின் கனவு விரைவில் கலைந்துவிடும் - நிமல் சிறிபால சில்வா
நூறு நாட்கள் வேலைத்திட்டம் முடியும் வரையிலேயே தேசிய அரசாங்கம் நடைமுறையில் இருக்கும். அடுத்த பொதுத்தேர்தலின் பின்னரும் தேசிய அரசாங்கத்தினை கொண்டு செல்ல முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தினை கொண்டு செல்ல முடியுமென ரணில் விக்கிரமசிங்க கனவு காணக்கூடாது. பிரதமர் கனவு இன்னும் சிறிது காலத்திற்கே எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னரும் தேசிய அரசாங்கத்தினை முன்னெடுப்போம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள நிலையில் தேர்தலின் பின்னரும் தேசிய அரசுடன் செயற்பட தயாரா என வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேசிய அரசாங்கத்தின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர். நாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள். எனவே இந்த மூன்று விடயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதனால்தான் நாம் தேசிய அரசாங்கத்துடன் தொடர்புபட்டுள்ளோம். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தினை அமைத்திருந்தாலும் நாம் இப்போதும் எதிர்க்கட்சியாகவே உள்ளோம்.
எனவே ஐக்கிய தேசிய கட்சியுடன் எமக்கு எவ்விதமான தொடர்பும் இல்லை. அதேபோல் 19ஆவது திருத்தச்சட்டம் உள்ளிட்ட தேசிய அரசின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில் நல்ல விடயங்களை ஆதரிப்பதற்கு நாம் தயார். ஆனால் நூறு நாட்கள் வேலைத்திட்டம் முடிவடைந்த பின்னர் உடனடியாக பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். அதன் பின்னர் தனிக்கட்சி அரசாங்கம் அமையும். எனவே தேசிய அரசாங்கம் இந்த நூறு நாட்கள் வரை மட்டுமே வாழும்.
மேலும் பொதுத்தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் முன்னெடுக்கப்படாது. ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தில் தம்மை தக்க வைத்துக்கொள்ள முடியும் என நினைக்கின்றார். இவர்களின் எண்ணம் நிறைவேறப்போவதில்லை. பாராளுமன்றம் எதிர்வரும் 23ஆம் திகதி கலைக்கப்படுமாயின் அதன் பின்னர் பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெற்றி பெற்று பாராளுமன்றில் ஆட்சியமைக்கும். மக்களின் ஆதரவின்றி தொடர்ந்தும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க செயற்படலாம் என கனவு காண்கின்றார். இந்த கனவு நூறு நாட்கள் முடிவடையும் வரை மட்டுமே. நூறு நாட்களின் பின்னர் பொதுத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் கனவு கலையும் எனவும் குறிப்பிட்டார்.
Post a Comment