400 கோடி ரூபா செலவு செய்யப்பட்ட 47 மாடி ஹோட்டல், 50 ரூபாவில் மாற்று நடவடிக்கை இடம்பெற்றது
-Vi-
அலரி மாளிகைக்கு முன்னால் சினோ லங்கா தனியார் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் தொடர்பில் கொள்கை வகுப்பு பொருளாதார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா நேற்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாட்டினை செய்துள்ளார். நிறுவனங்களுக்கிடையில் மோசடி செய்துள்ளமை தொடர்பில் உடனடி விசாரணை செய்யக் கோரியும் தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகைக்கு முன்னால் 47 மாடிகளைக் கொண்ட ஹோட்டல் ஒன்றினை சினோ லங்கா நிறுவனம் புனரமைத்து வருகின்ற நிலையில் அவ் ஹோட்டலை பார்வையிட நேற்று பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா சென்றுள்ளார்.
அவ் ஹோட்டல் யாருடைய அனுசரணையில் நிர்மாணிக்கப்படுகின்றது? எவ்வளவு செலவில் கட்டுமாணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது? என்ற தகவல்களை அந் நிறுவன உயரதிகாரிகளிடம் பெற்றுக் கொண்டதுடன் இந் நிறுவன செயற்பாடுகளில் ஊழல் மோசடி இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த இடத்தில் தற்போது ஹோட்டல் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இது யாருடைய தனிப்பட்ட தேவைகளுக்காக நிர்மாணிக்கப்படுகின்றது? எவ்வாறு இது சினோ லங்கா நிறுவனத்திற்கு கைமாறியது என்பது தொடர்பில் சந்தேகம் உள்ளது. எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள தகவலின்படி 47 மாடிகளைக் கொண்டு நிர்மாணிக்கப்படும் இவ் ஹோட்டலுக்கு சுமார் 400 கோடி ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதெனவும் நிறுவனத்தினை கைமாற்றும் செயற்பாடுகள் சட்ட ரீதியாக நடைபெறவில்லை வெறுமனே 50 ரூபாவில் மாற்று நடவடிக்கைகள் இடம்பெற்றது என்று தகவல் கிடைத்துள்ளது.
எனவே இது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அத்தோடு இந் நிறுவனத்தின் நிர்மாணப்பணிகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாட்டினையும் முன்வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment