பள்ளிவாசல்களையும் விட்டுவைக்காத இஸ்ரேலிய பயங்கரவாதம்
ஹமாஸ் போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் நீடிக்கிறது. போராளிகளும் எதிர் தாக்குதல் நடத்தி இஸ்ரேலுக்கு நெருக்கடி அளித்து வருகின்றனர். பொதுமக்களையும் குழந்தைகளையும் பலி வாங்கும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஐ.நா., அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தியும் பலன் இல்லை.
15-வது நாளான இன்று இஸ்ரேல் ராணுவம் பல்வேறு பகுதிகளில் குண்டுமழை பொழிந்தது. கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் ஷெஜாயாவில் உள்ள 100 இடங்கள் உள்பட மொத்தம் 190 இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில், பல்வேறு மசூதிகள், ஒரு விளையாட்டு மைதானம் மற்றும் ஒரு மருத்துவமனை அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டதாகவும், டாக்டர்கள் உள்பட 70 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீனிய சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 604 பாலஸ்தீனியர்களும், 29 இஸ்ரேலியர்களும் இறந்துள்ளனர்.
எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு ஹமாஸ் இயக்கத்தினர் சுரங்கப்பாதைகளை பயன்படுத்துவதால் அவற்றை அழித்து தரைமட்டமாக்கும் எங்கள் நோக்கம் நிறைவேறும்வரை போர் நிறுத்தம் அறிவிக்க முடியாது என்று இஸ்ரேல் நீதித்துறை மந்திரி தெரிவித்தார்.
Post a Comment