பலஸ்தீன முஸ்லிம் உறவுகளுக்காக துருக்கியில் 3 நாள் துக்கதினம்
இஸ்ரேல் தாக்குதலில் நூற்றுக் கணக்கான பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டதற்கு நேற்று செவ் வாய்க்கிழமை முதல் துருக்கியில் மூன்று நாள் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி துணை பிரதமர் புலன்ட் அரின்க் இந்த அறிவிப்பை விடுத்தார்.
வெளிநாடொன்றில் இடம்பெறும் அனர்த்தம் அல்லது சம்பவங்களுக்கு துருக்கியில் இவ்வாறு தேசிய துக்கம் அனுஷ்டிக்கப்படுவது அரிதானதாகும்.
'பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் முன்னெடுக்கும் இரக்கமற்ற படுகொலையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இது ஒரு சமூகத்திற்கு எதிரான குற்றச்செயலாகும். மூன்று நாள் துக்கத்தை அனுஷ்டிக்க எமது அமைச்சரவை தீர்மானித்துள்ளது" என்று அரின்க் குறிப்பிட்டார்.
துருக்கி பிரதமர் ரிசப் தய்யிப் எர்டொகன் தலைமையில் ஐந்து மணி நேரம் நீடித்த அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னரே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. காசா மீதான தாக்குதல் குறித்து சர்வதேச அளவில் கடுமையான கண்டனம் வெளியிடும் நாடாக துருக்கி செயற்பட்டு வருகிறது. இஸ்ரேல் ஹிட்லரையும் விஞ்சி காட்டுமிராண்டித்தன மாக நடந்துகொள்வதாக பிரதமர் எர்டொகன் குற்றம்சாட்டியிருந்தார். அத்துடன் இஸ்ரேலுடன் எந்த உறவும் மேம்படுத்தப்பட மாட்டாது என்றும் அவர் உறுதி அளித்தார். 'பலஸ்தீன மக்களுக்கு எதிராக மனிதாபிமானமற்ற முறையில் படுகொலையில் ஈடுபடும் இஸ்ரேலுடன் எந்த ஒப்பந்தமும் செய்துகொள்ளப்பட மாட்டாது" என்று துணை பிரதமர் புலன்ட் அரின்க் குறிப்பிட்டார்.
Post a Comment