மஸாஹினாவின் கைது, ஒரு தமிழ் ஆசிரியர் சொன்ன கதை
மஹியங்கனையைச் சேர்ந்த சகோதரி மஸாஹினாவிண் கைது விவகாரத்தினை நினைக்கையில் கடந்த காலத்தில் என் மதிப்பிற்குரிய தமிழ் ஆசிரியர் ஒருவர் சொன்ன சிறிய கதை ஒன்றுதான் ஞாபகம் வருகின்றது. இனியும் இப்படியும் நடக்கலாம் என்பதற்காய் பகிர்ந்து கொள்கிறேன் '
தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரசுடன் மோதலில் ஈடுபட்ட ஆரம்ப காலத்தில் நடந்த கதையிது,,
அந்தக் கால கட்டத்தில் கொழும்பில் கற்றுக் கொண்டிருந்த ஒரு யாழ்ப்பாணத்து மாணவர் பாடசாலை விடுமுறை முடிந்து இரயிலில் மீண்டும் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருக்கையில் பாதுகாப்புப் படையினரால் அவரும் அவரது புத்தகப்பையும் சோதனைக்குட்படுத்தப்பட்டு அவர் கைது செய்யப்படுகிறார்,
இதை எதிர்பாராத மாணவன் தான் எந்தத் தவறும்செய்யவில்லை, என்னிடம் எந்த ஆயுதங்களும் இல்லை, எனக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்னை விட்டு விடுங்கள் எனக் கதறியிருக்கின்றார். அந்தப் பாசை பாதுகாப்பு படையினரின் காதுகளுக்கு எட்டவில்லை, இரண்டொரு அடியும் அடித்து இருக்கிறார்கள். பின்னர் பலர் கூடி சிங்கள மொழியில் விடயத்தை விளங்கப்படுத்தி மிகவும் போராடித்தான் அவர்களிடமிருந்து அம்மாணவனை விடுதலை செய்திருக்கிறார்கள்,
புத்தகப்பையில் இருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பேராயுதமானது ஒரு மடக்கை வாய்ப்பாடு, அம்மாணவனிடம் கேட்கப்பட்ட கேள்விகள் - இத்தனை போன் நம்பர்களும் எங்கிருந்து உனக்கு கிடைத்தன, இவைகள் யாருடைய நம்பர்கள் எதற்காக இதை பத்திரப்படுத்தி டைப் செய்து வைத்துள்ளாய் உண்மையைச் சொல் என்பதே
தான் சார்ந்த தொழில் ரீதியான பொது அறிவு கூட சமூகதத்தில் மிக முக்கியமான பதவிகளில் இருப்பவர்களிடம் இல்லாதிருப்பது கேள்விக்குரியதா? அல்லது கேலிக்குரியதா என்பது உங்களது தீர்மானம்
.
இது இருக்க , அவர்கள் பிழைகள் செய்தால் தண்டனைபெறாது தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு மிக அதிகம், ஆனால் பொதுமக்களாகிய நாம் இந்த சட்டத்தை நாங்கள் அறிந்திருக்கவில்லை, என்று சொல்வதால் தப்பித்துக் கொள்ள இயலாது
தப்பு செய்யாவிட்டாலும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் போது அதனால் ஏற்படும் நாட் கடத்தலும் மன உளைச்சலும் அதை நிரூபிக்க எடுக்கும் முயற்சிகளும் எம்மை பெரும் சோதனைக்குள் தள்ளிவிடும் ,
எனவே முடிந்தவரை தற்போதைய சூழலில் சந்தேகத்திற்கிடமானவைகளை தவிர்ந்து கொள்ளலே சிறந்தது, (வெசாக் தினத்தில் தோரணங்களை படம் எடுத்தவர்கள் கைது செய்யப்பட்டதை இங்கு நினைவு கூர்கிறேன்).. எனவே முடிந்தவர்கள் தயவு செய்து பாமர மக்களுக்கு இவை பற்றி ஓரளவேணும் விழிப்புணர்வை வழங்க முயற்சி செய்வது காலத்தின் தேவையாகின்றது.. , ஏனெனில் பசியிலிருக்கும் ஓநாய்களை சோர்ந்திருக்கும் ஆடுகளை நோக்கி அவிழ்த்து விட்டாற் போல் இருக்கின்றது இன்றைய எமது நிலை
Useful Article..
ReplyDelete