யூதர் - பலஸ்தீன மோதல்களுக்கு பிரித்தானியாவே பொறுப்பு - வஸந்த சேனநாயக்க
யூதர்களுக்கும் பலஸ்தீன மக்களுக்கும் இடையே மூண்டுள்ள மோதல்களுக்கு முதலாவதாக பிரித்தானியாவே பொறுப்புக்கூறக் கடமைப்பட்டிருக்கிறது. மேலும் யூதர்களால் பலஸ்தீனர்களுக்கெதிராக இழைக்கப்பட்டுவரும் அநியாயங்களின் முழுப்பொறுப்பையும் பிரித்தானியாவே ஏற்க வேண்டும் என்று வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வஸந்த சேனநாயக்க கூறினார்.
பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான இலங்கை அமைப்பும் கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதரகமும் இணைந்து ஒழுங்குசெய்த பலஸ்தீன மக்களின் வெளியேற்றத்தை நினைவு கூரும் 70 ஆவது நக்பா தினம் தொடர்பான நிகழ்வு கொழும்பிலுள்ள சர்வதேச கற்கைக்கான லக் ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் கடந்த வாரம் இடம் பெற்றபோது அதில் தலைமை தாங்கி உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் வஸந்த சேனநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
1948 ஆம் ஆண்டு பலஸ்தீன நாட்டை இரண்டாக உடைத்து அங்கு இஸ்ரேல் என்ற ஒரு நாடு தோற்றுவிக்கப்பட்டது. இதனால் அங்கு பூர்வீகக் குடிகளாக வாழ்ந்த 7 இலட்சம் மக்கள் ஜோர்தான், சிரியா, எகிப்து போன்ற நாடுகளில் தஞ்சமடைந்தனர். இந்த சோக நிகழ்வை நினைவு கூருமுகமாகவே ‘நக்பா’ தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
கொழும்பில் நடைபெற்ற மேற்படி 70 ஆவது வருட நக்பா தின நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
இஸ்ரேல், பலஸ்தீன பிரச்சினை உலகில் இடம்பெற்று வரும் மிகவும் பழைமை வாய்ந்த போராட்டங்களில் ஒன்றாகும். பலஸ்தீன நாட்டை இரண்டாகப் பிரித்து அங்கு இஸ்ரேல் நாட்டை உருவாக்கியுள்ளனர். அங்கு பரம்பரையாக வாழ்ந்து வந்த பலஸ்தீன மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.
அன்று இலங்கை அந்நியரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது போலவே அப்போது பலஸ்தீன நாடும் அந்நியர் பிடியிலே இருந்தது. இத்தகைய சந்தர்ப்பத்திலேதான் பிரித்தானியா யூத ராஜ்ஜியத்தை அங்கு நிறுவ வழிவகுத்தது. இதன் விளைவாக யூதர்களுக்கும் பலஸ்தீனர்களுக்கும் இடையே நிகழும் மோதல்களுக்கு பிரித்தானியாவே முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும். அயலவர்கள் இருவரையும் மோதவிடும் அசிங்கமே பிரித்தானியாவால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றார்.
இவ்வைபவத்தில் மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், இலங்கை – பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்குழு இணைத்தலைவரும் தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் சுஹைர் செய்த் உட்பட பல பிரமுகர்களும் உரையாற்றினர்.
-Vidivelli
வாழ வந்தவர்கள் ஆள வந்தவர்களாகி வந்த காரியம் கைகூடாது ஓட வேண்டிய நிலையில் தீர்க்காது விட்டுச் சென்ற சிக்கல்களே பலஸ்தீன், காஷ்மீர், ஸ்ரீ லங்கா போன்றன.
ReplyDeleteஆம், பாலஸ்தீனர்களுக்கும் அதன் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் தூர இருந்தாவது ஆயுதம் விற்றுப் பிழைப்போம் என்ற அசிங்கத்தையே பிரிட்டிஷார் அரங்கேற்றி உள்ளனர்.
இவற்றைத் தீர்த்து வைக்கும் தார்மீகப் பொறுப்பு ஏனையோரைவிட அவர்களுக்கு உள்ளது; அது அவர்களின் முன்னோர்களின் பாவங்களுக்கு பரிகாரமாகலாம்.
இவ்வளவு அப்பட்டமான அனியாயம் இங்கு கமன்ட்செய்து விளயாடிவரும் காழ்ப்புவாதிகளுக்கு தெரியாமலா உள்ளது???
ReplyDelete