குழுக்களை நியமித்த ரணில் - ஆத்திரமடைந்த அஜித், மாகாண தேர்தலிலும் தோல்விதான் என்கிறார்
ஐக்கிய தேசியக்கட்சிக்குள்ளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நிலைப்பாடு மேலோங்கிவருவதாக தெரிகின்றது. பெருமளவானோர் அவருக்கு ஆதரவாக இருக்கின்றபோதிலும் சில தரப்பினர் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மாற்றம் ஏற்படவேண்டுமென்று கோரி வருகின்றனர். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படவேண்டியதன் அவசியம் குறித்து அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று அலரிமாளிகையில் ஐக்கிய தேசியக்கட்சி அமைச்சர்களுடனான சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு பல குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.இந்தக் குழுக்கள் நியமனம் தொடர்பில் பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். குழுக்களை அமைப்பதன் மூலம் அரசாங்கத்தை முன்கொண்டு செல்ல முடியாது. அரசாங்கத்தை முன்கொண்டு செல்லவேண்டுமானால் கட்சிக்குள் மாற்றங்களை செய்யவேண்டும். குழுக்களை அமைத்து நேரத்தை கடத்த கூடாது என்று அதிருப்தி தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலை தொடர்ந்தால் அடுத்த மாகாணசபைத் தேர்தலில் தோல்வி அடையவேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment