Header Ads



காலி நீதிமன்றத்தில் களமாடிய, நமது சட்டத்தரணிகள் (அப்பாவி இளைஞன் காப்பாற்றப்பட்டான்)




-எம். ஷிஹார் ஹஸன்-

காலி சட்டத்தரணி மீதான தாக்குதல் வழக்கு

அவனது தந்தையுடன் இருக்கும் தனது சொந்த பிரச்சினைக்காக, தனக்கு தாக்குதல் நடத்தியதாக கூறி 22 வயதேயான எந்தக் குற்றமும் செய்யாத இளைஞனை போலி்ப் புகார் செய்து போலிஸ்  வலையில் போட்டாள் காலியை சேர்ந்த பெண் சட்டத்தரணி. ஒரு சட்டத்தரணிக்கு அடித்ததாக கூறி கடந்த 4ஆம் திகதி காலி நீதிமன்றத்தில் இருக்கும் சுமார் 85 சட்டத்தரணிகள் அவருக்காக ஆஜராக, அந்த இளைஞனுக்காக தனியாளாக நான் ஆஜரானேன். சரமாரியான விவாதத்துக்கு மத்தியில், 40-45 வருட அனுபவம் உள்ள சட்டத்தரணிகள் பலர் என்னைப் பயம் காட்ட முயற்சி செய்ய, ஒரு சட்டத்தரணி நடு நீதிமன்றத்தில் இனவாதத்தைக் கிளப்பி ஆட்டம் காட்டினார். கோபம் பொத்துக்கொண்டு வர அடக்கி வாசித்து அழகாக பதிலடி கொடுத்தேன். அனைத்து சட்டத்தரணிகளதும் அழுத்தத்தின் பேரில் அவ்விளைஞனை 2 நாள் விளக்க மறியலில் வைக்கவும், அடையாள அணிவகுப்பு நடத்தவும் நீதவான் உத்தரவிட்டார்.

இரண்டாவது நாள் வழக்கு கூப்பிடப்பட்ட போதும் சுமார் 60 சட்டத்தரணிகள் எனக்கு எதிராக ஆஜராக, இளைஞன் சார்பாக நான் மட்டும் ஆஜரானேன். துரதிஷ்டவசமாக அன்று பிரதான நீதவான் வெளிநாடு சென்றதால் அன்று வந்த மேலதிக நீதவானின் காதில் நான் பிணைக்காக ஊதிய சங்கு செவிட்டுக்காதிலேயே விழ, பிணையை மறுத்து மருபடியும் அவ்விளைஞன் இன்றைய தினம் வரை விளக்க மரியளுக்கு அனுப்பப்பட்டான். எந்தவித தாக்குதலும் இன்றி பொய் சொல்லி அன்று வரை வைத்தியசாலையில் படுத்திருந்த அந்த பெண் சட்டத்தரணி, இவ்விளைஞன் மேலும் 13 நாட்கள் விளக்க மறியல் கூண்டில் அடைக்கப்பட்ட குஷி தாங்க முடியாமல் அன்றே வீடு வந்திருந்தாள். 

இளைஞனையும் அவனது குடும்பத்தையும் பலி வாங்கவும், பாடம் புகட்டவும் என காவல்துறை, சட்டத்தரணிகள் என எல்லா பெரும் தலைகளும் சேர்ந்து பல முஸ்தீபுகள் எடுத்திருந்தாலும், யுத்த காலமாக நீதிமன்றம் மாறி எம்மீது அம்பின் மேல் அம்பாக எறிந்திருந்தாலும், அல்லாஹ்வின் கிருபையால் எம்மால் அவ்விளைஞனை பிணையில் எடுக்க முடியுமாகியது. அல்ஹம்துலில்லாஹ். மழைக்குக்கூட போலிஸ் நிலையம் பக்கம் ஒதுங்காத அவ்விளைஞனும் அவனது குடும்பத்தினரும் 2 வாரம் அனுபவித்த வலி ஒரு முடிவுக்கு வந்தது. 

பிணை தான் கிடைத்ததே ஒழிய, வழக்கு முடியவில்லை. எனவே, இது போன்ற அநியாயக்காரர்களின் சதி வலைகளில் விழாமல் இருக்கவும், அவர்கள் எம் வாழ்வில் தானாக குறுக்கே வந்து பிரச்சினை ஏற்படுத்தாமல் இருக்கவும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக. 

இன்று இவ்வழக்கில் ஆஜராகி எனக்கு தோல் கொடுத்த எனது சகோதரன் சட்டத்தரணி எம். ஷிராஸ் ஹஸன், சட்டத்தரணி ஜீவணீ பிரியங்கா மற்றும் சட்டத்தரணி நிரூஷா ஹிமாலி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். 

கஷ்டத்திலிருந்து விடுபட்டு ஓரளவு அமைதிப்பெருமூச்சு விடும் அக்குடும்பத்தை உங்களது பிரார்த்தனைகளில் இணைத்துக்கொள்ளுங்கள்.

"அவர்கள் சதி செய்கிறார்கள். அல்லாஹ்வும் சதி செய்கிறான். நிச்சயமாக அல்லாஹ்வே மிகச்சிறந்த சதியாளன் - அல்குர்'ஆன்"

15/12/2017

No comments

Powered by Blogger.