கல்குடாவில் மதுபான தொழிற்சாலை - முஸ்லிம் அரசியல்வாதிகள் மௌனம், தமிழ் எம்.பி.க்கள் எதிர்ப்பு
மட்டக்களப்பு கல்குடா பகுதியில் அரசின் அனுமதியுடன் அமைக்கப்படும் மதுபான உற்பத்தி தொழிற்சாலையில் குண்டர் குடுவொன்று செயற்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
சித்தாண்டி ஸ்ரீ இராமகிருஸ்ண வித்தியாலயத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
கல்குடா பகுதியில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மதுபான உற்பத்தி தொழிற்சாலையின் உண்மை நிலையினை அறிந்து, ஊடகமென்ற ரீதியில் அது தொடர்பாக அறிக்கையிடச்சென்ற மட்டக்களப்பு பிராந்திய ஊடகவியலாளர்களான நல்லதம்பி நித்தியானந்தன் மற்றும் புண்ணியமூர்த்தி சசிதரன் ஆகியோர் தாக்கப்பட்டுள்ளார்கள்.
அமைக்கப்பட்டு வரும் மதுபான உற்பத்திச் தொழிற்சாலையின் முக்கிய பொறுப்பிலுள்ள வாழைச்சேனை கல்குடா பகுதியிலுள்ள ஜெகன் என்ற நபரின் கட்டளைக்கு ஏற்ப அவரின் சகோதரர்களினால் குறித்த ஊடகவியலாளர்கள் இருவரும் தாக்கப்பட்டுள்ளார்கள்.
ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து சுமார் 6 கிலோ மீற்றரைத் தாண்டியும் பொது மக்கள் நடமாட்டமுள்ள மட்டக்களப்பு பிரதான வீதியூடாக மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்றிருக்கின்றார்கள் என்றால் மதுபான உற்பத்தி தொழிற்சாலைக்குள் ஊடகவியலாளர்களை தாக்கும் குண்டர்கள் குழுவொன்று செயற்படுவதாகவே அமைகின்றது.
கட்டப்படும் மதுபான உற்பத்திச் தொழில்சாலை உடன் நிறுத்தப்பட வேண்டும். குறித்த தொழிற்சாலைக்கு செல்லும் வீதியானது பொதுமக்கள் பயணிக்கும் வீதி. அவ்வீதி வழியாக சென்ற வேளையிலேயே ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள்.
அத்துடன் குறித்த வீதி வழியாக பொதுமக்களை பயணம் செய்வதற்கு கூட குறித்த குண்டர்கள் குழு அனுமதி கொடுப்பதில்லையெனவும் தெரியவருகின்றது. பொது வீதியால் செல்ல அனைவருக்கும் சம உரிமையுள்ளது. அதனைத் தடுத்தல் என்பது அடிப்படை மனித உரிமை மீறல் ஆகும். அவ்வாறான நிலையில் பொது வீதியால் சென்ற ஊடகவியலாளர்களைத் தாக்கியுள்ளார்கள்.
வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் குறித்த மதுபான உற்பத்தி தொழில்சாலை கட்டப்படும் பகுதிக்கு செல்கின்ற வேளையில் பொலிஸ் பாதுகாப்புடன் தான் செல்வதாகவும், அந்தளவிற்கு அங்கு குண்டர்கள் குழுவின் அச்சுறுத்தல் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் பல முஸ்லிம் அரசியல்வாதிகளை கொண்டுள்ளது. அதேவேளை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. பாராளுமன்றத்தில் உரையாற்றிய யோகேஸ்வரன்கூட இந்த மது தொழிற்சாலைக்கு எதிர்ப்பு வெளியிட்டார். தற்போது மற்றுமொரு தமிழ் எம்.பி.யும் பகிரங்கமாக எதிர்க்க ஆரம்பித்துள்ளார்.
Does the cm of eastern province turned a blind eye upon this menacing project in batticaloa ??
ReplyDelete