நீர்கொழும்பில் இப்படியும் ஒரு கொள்ளை 'எமி' இலக்கங்களை கொண்டு பொலிஸார் நடவடிக்கை
(ரெ.கிறிஸ்ணகாந்)
தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றின் நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ள கிளையில் விற்பனைக்காக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த போது திருடப்பட்ட தொலைபேசிகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் சகோதரிகள் இருவரை நீர்கொழும்பு சட்டத்தை நிலைநிறுத்தும் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றின் நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ள கிளையில் விற்பனைக்காக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த 14 செல்லிடத் தொலைபேசிகளையும் 4 ரவுட்டர்களையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர் திருடிக் கொண்டு தலைமறைவாகியிருந்தார்.
குறித்த நிறவனம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து திருடப்பட்ட தொலைபேசிகளின் எமி (EMI) இலக்கங்களை வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன் மூலம் அந்த தொலைபேசிகள் பாவிக்கப்படும் இடங்கள் மற்றும் பாவிக்கும் நபர்கள் தொடர்பான தகவல்களை பெற்று அந்த நபர்களை விசாரணை செய்தபோது குறித்த தொலைபேசிகளை விற்பனை செய்த சந்தேக நபர்களான இரு சகோதரிகள் இனங்காணப்பட்டனர்.
அவர்கள் இருவரையும் விசாரணை செய்தபோது தலைமறைவாகியுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தரின் சகோதரிகள் அவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
திருடப்பட்ட தொலைபேசிகளை அந்த சகோதரிகளிடமிருந்து பெற்று விற்பனை செய்வதற்கு இடைத்தரகராக இருந்த மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருடப்பட்ட தொலைபேசிகளில் 9 தொலைபேசிகளை மீட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை மன்றில் ஆஜர் செய்யவுள்ளதாகவும், தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை கைது செய்ய நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும். பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால் தசநாயக்கவின் ஆலோசனையின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹனவின் வழிகாட்டலில் சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.ஆர்.ஏ. ஜி. மனோகர, பொலிஸ் பரிசோதகர்களான ஏ.எம். ரஹுப், எச்.எம்.சந்தன, டெனி பெரேரா, கான்ஸ்டபிள்களான அமல், ஜயசிங்க , சமித் ஜயசேகர ஆகியோர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதோடு தொலைபேசிகளையும் மீட்டுள்ளனர்.
Post a Comment