கொழும்பில் முஸ்லிம்களுக்கு பெரும் ஆபத்து - எச்சரிக்கிறார் முஜிபுர் ரஹ்மான்
மத்திய கொழும்பில் வேலை வாய்ப்பின்றி இருக்கும் முஸ்லிம் இளைஞர்களில் அதிகமானோர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இளைஞர்களை இந்த ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்கு மத்திய கொழும்பில் தொழிற்பயிற்சி நிலையமொன்றினை நிறுவி மாதம் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவுடன் தொழிற்பயிற்சிகள் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பு மருதானை அஸ்ஸபாப் கேட்போர் டத்தில் நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் கொழும்பு மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலே அவர் இவ்வாறு கூறினார். அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவர் பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில் தெரிவித்ததாவது,
'கொழும்பு மாவட்ட முஸ்லிம் மாணவர்களின் கல்வி நிலைமை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றமை சமூகத்துக்குப் பெரும் ஆபத்தாகும். இந்நிலைமையினைச் சீர்செய்வதற்கு அரசியல்வாதிகளினால் மாத்திரம் முடியாது. சிவில் சமூகமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மத்திய கொழும்பில் க.பொ.த. (சா/த) பரீட்சை எழுதும் முஸ்லிம் மாணவர்களில் 70 சதவீதமானோர் சித்தியடைவதில்லை. இதனால் இவர்களுக்குத் தொழில் வாய்ப்பும் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. தொழில் இன்மையினாலே இவர்கள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
சிறந்த பாடசாலைகளில் தமது பிள்ளைகளுக்கு அனுமதி கிடைக்காததினால் பெற்றோர் பிள்ளைகளை சர்வதேச பாடசாலைகளில் அனுமதிக்கிறார்கள். சர்வதேச பாடசாலைகள் கொழும்பில் சில்லறைக்கடைகள் போல் பரவியுள்ளன. அரபு பெயர்களுடன் இயங்கி வரும் சர்வதேச பாடசாலைகளினால் கல்வி நிலைமை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்த்து சில வருடங்களில் மீண்டும் அம்மாணவர்களை தமிழ் மொழி பாடசாலைகளில் சேர்ப்பதற்கு வருகிறார்கள். இதனால் மாணவர்களுக்கு மொழிப்பிரச்சினையும் ஏற்படுகிறது. ஆரம்பத்தில் ஆங்கிலம் கற்ற மாணவர்கள் பின்பு தமிழில் கற்க வேண்டியேற்படுகிறது. 25 வருடகாலமாக இந்நிலை தொடர்ந்து வருகிறது. இது ஆபத்தான நிலையாகும்.
கொழும்பு மாவட்டத்தின் கல்வி நிலைமையை மேம்படுத்த அனைவரும் முயற்சிக்கிறார்கள். பல இயக்கங்கள் களத்தில் இறங்கியுள்ளன. ஆனால் எதிர்பார்க்கும் பிரதிபலன் மாற்றம் ஏற்படவில்லை. இதற்கான காரணத்தை ஆராயும் போது சமூக சூழல், வறுமை, பெற்றோர் கல்வியறிவின்மை என்பனவே காரணங்களாக அறியப்பட்டுள்ளன.
முஸ்லிம் மாணவர்களில் 70 வீதமானோர் சிங்கள மொழியிலேயே கல்வி கற்கிறார்கள். 30 வீதமானோரே தமிழ் மொழியில் கற்கிறார்கள்.
பரீட்சை முடிவுகளை ஆராய்ந்து பார்த்தால் சிங்கள மொழியில் கற்பவர்களின் பரீட்சை முடிவுகள் தமிழ் மொழியில் கற்பவர்களின் முடிவுகளை விடவும் குறைவாகவே இருக்கிறது. சிங்கள மொழிப் பாடசாலைகளில் (சிங்களப் பாடசாலை) பயிலும் முஸ்லிம் மாணவர்களின் பரீட்சை முடிவுகள் முஸ்லிம் பாடசாலைகளில் சிங்கள மொழியில் பயிலும் மாணவர்களின் பரீட்சை முடிவுகளை விட சிறந்ததாக இருக்கிறது.
ஏ.ஈ.குணசிங்க வித்தியாலயத்தை ஒரு மாதிரி முஸ்லிம் ஆரம்ப பாடசாலையாக மாற்றினோம். 350 பிள்ளைகளின் பெற்றோர் கூட்டங்களுக்கு வந்தார்கள். ஆனால் 50 மாணவர்களே அனுமதி பெற்றார்கள். இப்பாடசாலையில் இஸ்லாம் போதிக்கவும் ஆசிரியர் நியமிக்கப்பட்டார். எமது பெற்றோரின் மனோநிலையில் மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும். அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
கொழும்பில் சர்வதேச ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. கொழும்பில் தொழில்வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு அவற்றில் தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுப்பதற்காக மத்திய கொழும்பில் ஹோட்டல் பாடசாலையொன்றினை நிறுவும்படி சம்பந்தப்பட்ட அமைச்சரையும் பிரதமரையும் கோரியுள்ளேன்.
கொழும்பில் முஸ்லிம்களின் கல்வியை முன்னேற்றுவதற்கு இம்மக்களின் வாழ்க்கைத் தரத்தினையும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அதற்கான திட்டங்களையும் முஸ்லிம் கல்வி மாநாடு வகுக்க வேண்டும். கொழும்பில் பாடசாலைக்கே செல்லாத பிள்ளைகள் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். பிறப்புச்சாட்சிப் பத்திரம்கூட இல்லாத பிள்ளைகள் நூற்றுக்கணக்கானோர் இருக்கிறார்கள். பெற்றோரின் கவனயீனம், பெற்றோர் பிரிந்து வாழ்கின்றமை போன்றவையே இவற்றுக்கான காரணங்களாகும். இவர்களை இனங்கண்டு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றார்.
ARA.Fareel
May allah save our community
ReplyDeleteஅவசரமாக கொழும்பு மக்களின் கல்வியில் முன்னேற்றம் செய்ய வேண்டுமானால் நன்கு உளவியல் தெரிந்த நல்ல சேவை மனப்பான்மை உள்ள ஆசிரியர் குழு ஒன்று தேவை .சர்வதேச பாடசாலைகள் போன்று இங்கு கட்பித்தல் நடவடிக்கைகள் காணப்பட வேண்டும் .மாணவர்களிடம் எவ்வித கட்டணங்களும் அறவிடல் கூடாது .இதட்கான செலவுகளை கவனிப்பதட்கு வர்த்தகர்களை கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும் .இந்த மாணவர்களின் திறமைகளை ஊடகங்கள் மூலம் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் .
ReplyDeleteThis has bee a big issue for many years now ..why did not Clolombo Muslims did not realise this for many years and why politicians fail on them .. all Muslim politicians who came to power in Colombo didn't care and now is time for you think about it ?
ReplyDeleteமாணவர்கள் மத்தியில் மாவட்ட ரீதியில் போட்டிகளை நடத்தி ஊக்கவிக்க வேண்டும் இதற்கான பொருளாதார செலவுகளை தனவந்தர்கள் மறுமைக்காக வேண்டி செலவொ செய்ய முன்வர வேண்டும்.
ReplyDelete