அம்பாறை முஸ்லிம்கள் பீதி, ஆபத்தை தடுக்க வேண்டும் என்கிறார் ஹிஸ்புல்லாஹ்
-ARA.Fareel-
தொல்பொருள் திணைக்களம் அம்பாறை மாவட்டத்தில் 423 இடங்களை தொல்பொருள் பிரதேசங்களாக இனங்கண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்கள் தங்களது காணிகள் தொடர்பில் பீதியடைந்துள்ளனர்.
இச் சந்தர்ப்பத்தில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் முஸ்லிம்களின் காணிகளுக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டுள்ள தொல்பொருள் ஆய்வுகள் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்;
சம்மாந்துறை, இறக்காமம் போன்ற பகுதிகளில் தொல்பொருள் ஆய்வுகள் என்ற ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளினால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. அவர்கள் தமது பூர்வீகக் காணிகளை இழந்து விடுவோமோ என்று அங்கலாய்க்கின்றனர். இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அரசியல் தலைவர் உடனடியாக செயலில் இறங்க வேண்டும்.
தொல்பொருள் எல்லா இன மக்களுக்கும் சொந்தமானதாகும். அனைவரும் இதனைப் பாதுகாக்க வேண்டும். அதேவேளை தொல்பொருள் ஆய்வுகள் என்ற போர்வையில் முஸ்லிம்களின் காணிகள் அபகரிக்கப்படக் கூடாது. அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளுக்கு ஏனைய முஸ்லிம் பிரதிநிதிகள் இவ்விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கிறார்கள்.
தொல்பொருள் திணைக்களம் இனம் கண்டுள்ள 423 இடங்களையும் ஆய்வுக்குட்படுத்தும் போது அப்பகுதியில் அசாதாரண சூழ்நிலையொன்றும் உருவாகலாம். இது நல்லிணக்கத்துக்கும் நல்லுறவுக்கும் பங்கமாக அமையும்.
அம்பாறை மாவட்டம் 43 வீத முஸ்லிம்களைக் கொண்டுள்ளது.
இம்மாவட்டத்தில் இப்பாரிய எண்ணிக்கையிலான இடங்கள் தொல்பொருள் பிரதேசங்களாக இனம் காணப்பட்டுள்ளமை அங்குள்ள முஸ்லிம்களை வேறு இடத்துக்கு இடம்பெயரச் செய்யும் நடவடிக்கையாகவும் இருக்கலாம் எனச் சந்தேகிக்க வேண்டியுள்ளது. எனவே அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் பிரதிநிதிகள் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றார்.
Post a Comment