ரீடா ஐசாக்கின் கவனத்தில், இலங்கை முஸ்லிம்களின் முக்கிய விவகாரங்கள்
-விடிவெள்ளி ARA.Fareel-
உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகை தரும் சிறுபான்மை இனங்களின் பிரச்சினைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்கையாளர் ரீடா ஐசாக் நதேயாவை முஸ்லிம் பிரதிநிதிகள் சந்தித்து தமது பிரச்சினைகளை முன்வைக்கவுள்ளனர்.
இன்று பிற்பகல் 1 மணிக்கு கொழும்பிலுள்ள ஐ.நா. காரியாலயத்தில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பினை ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ஏற்பாடு செய்துள்ளார்.
முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினைகளிலும் வழக்குகளிலும் சட்டம் நிலை நாட்டப்படும்போது அதிகார துஷ்பிரயோகங்கள் இடம்பெறுதாகவும் சட்டம் தாமதப்படுத்தப்படுவதாகவும் ஐ.நா. நிபுணரைச் சந்திக்கும் முஸ்லிம் பிரதிநிதிகள் அவரிடம் முறையிடவுள்ளனர்.
அளுத்கமையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள், மும்மானை முஸ்லிம் பாடசாலையின் மைதானப் பிரச்சினை, மும்மானை கிராம முஸ்லிம் வர்த்தகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், பாத்தியா மாவத்தை பள்ளிவாசல் விவகாரம், பொரலெஸ்கமுவ பள்ளிவாசல் விவகாரம், மாதம்பை காணி விவகாரம் உட்பட முஸ்லிம்களின் பிரச்சினைகள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்கையாளர் ரீடா ஐசாக் நதேய்யாவிடம் விரிவாக விளக்கப்படவுள்ளதுடன் முறையிடப்படவுள்ளன.
பள்ளிவாசல்களை மூடிவிடுதல், பள்ளிவாசல் கட்டிட நிர்மாண அனுமதி கோரப்படும்போது தாமதித்தல், நிர்மாணங்களை சட்டவிரோதமானது எனக்கூறி அகற்றுமாறு உத்தரவிடுதல் போன்ற அதிகார துஷ்பிரயோகங்கள் பற்றியும் கலந்துரையாடப்படவுள்ளன.
அளுத்கமையில் 2014 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டும் அந்த வன்முறைகளுக்கு காரமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமை என்பன பற்றியும் தெரிவிக்கப்படவுள்ளதாக RRT அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சிராஷ் நூர்தீன் தெரிவித்தார்.
ஒவ்வோர் பிரச்சினையும் தெளிவுபடுத்துவதற்கும் அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கும் முஸ்லிம் பிரதிநிதிகள் இன்றைய சந்திப்பில் கலந்து கொண்டு பிரச்சினைகளை விபரமாகத் தெரிவிக்கவுள்ளனர்.
இன்று இலங்கை வருகை தரும் ரீடா ஐசாக் நதேயா 10 நாட்கள் இங்கு தங்கியிருப்பார். இலங்கையில் சமய, மொழி மற்றும் இன அடிப்படையிலான சிறுபான்மை இனங்களின் தற்போதைய நிலையைக் கண்டறிவதே இவரது விஜயத்தின் நோக்கமாகும்.
இவர் இங்கு தங்கியிருக்கும் நாட்களில் கொழும்பு உட்பட வடக்கு வட மத்திய கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பல்வேறு இடங்களில் வசிக்கும் சிறுபான்மை இனத்தவர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களது குறைகளையும் முறைப்பாடுகளையும் கேட்டறியவுள்ளார். அத்துடன் அரச அதிகாரிகள், தேசிய மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களையும் சந்திக்கவுள்ளார்.
கடந்த ஆண்டு புதிய அரசு பதவியேற்றது முதல் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்ளைப் பாராட்டும் அதேவேளையில் இந்நாட்டில் வாழும் பல்வேறுபட்ட சமூகங்களிடையே புரிந்துணர்வு அமைதி, ஒற்றுமை மற்றும் வேற்றுமை பாராட்டாமை போன்ற விடயங்களில் பாரிய சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ள நிலையுள்ளயினை மறக்க முடியாது என்று நதேயா கருத்து வெளியிட்டுள்ளார்.
தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதனூடாக மேற்படி சவால்களை இனங்காணவும், அவற்றிற்கான தீர்வுகளைக் கண்டறியவும் இலங்கை அரசிற்கு மற்றும் சமூகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே தனது விஜயத்தின் நோக்கம் என்று அவர் தெளிவுபுடுத்தியுள்ளார்.
எதிர்வரும் 2017 மார்ச் மாதத்தில் இலங்கை விஜயம் தொடர்பான தனது பூரண அறிக்கையை அவர் ஐ.நா. அமைப்பின் மனித உரிமைப் பேரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment