பிரேமதாசவின் வீட்டு கூரையை திருத்திக்கொடுத்த, அப்துல் ரஹ்மானின் 'எனர்ஜி' பேச்சு
“சிலாபம் திண்ணனூரான்”
“எனது எட்டு வயதில் இத் தொழிலை எனது வாப்பாவிடம் கற்றுக் கொண்டேன். இத் தொழிலே என்னை இன்று வாழவைக்கின்றது” என்கிறார் உலோகப் பாத்திரங்களை பழுது பார்க்கும் எம்.கே அப்துல் ரஹ்மான். 73 வயதைக் கொண்ட இவர், நான்கு மாடிகளுக்கும் மேல் சென்று கூரைகளை யும் கூரைப் பீலிகளையும் பழுதுபார்க்கிறார். இவருடன் நாம் பேச்சைத் தொடுத்தப்போது, அவரின் அருமையான தமிழ் வார்த்தைகள் பெரும் சந்தோஷத்தை அளித்தன.
கொழும்பு – 02 கொம்பனி வீதி நியூ பெசி லேனில் தனது வேலைத் தளத்தில் பெரும் அலுமினிய சட்டி பானைகளுடன் மல்லுக்கட்டிக் கொண்டு இருந்தவரிடம் முதலில் எமது கொக்கியை போட்டோம்.
''ஏழு பிள்ளைகளின் தந்தையெனக் கூறும் நீங்கள், இந்த வயதில் பழைய சட்டி பானைகளுடன் கட்டிப்பிடித்து போராடுகிறீர்களே'' என மீண்டும் கொக்கியை வீசியதும் அவர், முதலில் அலட்சியமாக சிரித்தார். அவரின் சிரிப்பில் தனது வெற்றியின் இரகசியம் கொட்டியது. “இளமையின் சக்தி இன்றும் என்னிடம் உள்ளது. அது எனக்குள் துடிதுடித்துக் கொண்டுதான் உள்ளது. அது எனக்குள் உறங்கிவதுமில்லை சேர்ந்து உட்காருவதுமில்லை” என ஒரு போடு போட்டார். “இரக்க உணர்வு இருக்கும் வரை இளமையும் என்னுடன் இருக்கும். “நாம் சிக்கிக் கொண்டோம், நாம் தொலைந்தோம், எமக்கு அதிர்ஷடமில்லை, நாம் முதிர்வை தொட்டுவிட்டோம், நம் நேரம் எம்மை விட்டு பிரிந்து விட்டது.
இனி நமக்கு வாய்ப்பு இல்லை, நாம் வாழ்வில் தோற்றுவிட்டோம். இனி நாம் தொழிலை கைவிட வேண்டியது தான்” என மனதில் எண்ணக்கூடாது. இவைகள் தான் எமது வளர்ச்சியையும் சாதனைகளையும் ஆர்வத்தையும் இல்லாமல் செய்யும் எதிரிகள் ஆகும்” என்றார் அப்துல் ரஹ்மான்.
அவரின் அருமையான கருத்துக்கள் எம்மையும் வலிமைப்படுத்தின. ஐந்தாம் வகுப்பு வரையே என்னால் கல்வி கற்க முடிந்தது. எனது எட்டு வயது தொடக்கம் பாடசாலை முடிந்து வீடு திரும்பியதும் எனது வாப்பாவின் பட்டறையில் எடுபிடி வேலைகளை செய்வேன். அதன் மூலமே இத் தொழிலை கற்றுக் கொண்டேன். நாங்கள் பட்டாங்கானி பாவா பரிவினர் தாய் மொழி உருது. தமிழ்நாடு நாகப்பட்டினமே எங்களின் பூர்வீகம். எங்களின் பாட்டன் கப்பலில் பித்தளை தகரத்தை பொருத்துவதும் கப்பல் பித்தளை தகர பழுதுகளை திருத்தும் வேலையை செய்து வந்துள்ளனர். இது அவர்களின் குடும்பத் தொழிலாகும். இத் தொழிலையே எனது வாப்பாவின் குடும்ப மும் செய்து வந்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், ஒரு நாள் எனது வாப்பா அவரின் தம்பிகள் நால்வருடன் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு புறப்பட்ட கப்பலில் தகர திருத்த வேலையை செய்து கொண்டு வந்துள்ளனர். அவ்வாறு வந்தவர்களில் எனது வாப்பாவின் தம்பி ஒருவர் அக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை அண்மிக்கும் தருணத்தில் கால்தவறி கடலில் விழுந்து கடலில் மூழ்கி தனது உயிரை அநியாயமாக பறிகொடுத்துவிட்டார்.
இந்த துயரத்தால் எனது வாப்பாவும் அவரின் ஏனைய மூன்று தம்பிகளும் இந்நாட்டிலேயே தங்கிவிட்டனர். ஒரு தம்பி கண்டியில் அப்போதைய ஆளுநரின் வீட்டில் சமையல் பணியில் இணைய, ஏனையவர்கள் இந்த கொம்பனித் தெருவில் உலோக பாத்திரங்களை திருத்தும் பட்டறையை அமைத்து தொழில்புரிந்துள்ளனர்.
அதையே இன்று நான் பின் தொடருகின்றேன்” என்று சொல்லியவரின் முகத்தில் சிரிப்பு மெல்லியதாக தகர்ந்தது. இவருக்குப் பின்னால் பெரும் வரலாறு தேங்கி வெளியே வராது அடைபட்டு வாழ்வதை கண்டு அதிர்ந்துப் போய்விட்டோம்” என தனது பூர்வீகத்தை விளக்கினார் அப்துல் ரஹ்மான்.
“இன்று இத் தொழிலை செய்பவர்கள் மிக மிகக் குறைவு. எனக்கு கொழும்பு மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலுமிருந்து பழுதான சமையல் பாத்திரங்களை கொண்டு வருகின்றனர். என்னை நாடி வருபவர்களிடம் எனது எண்ணப்படி திருத்த வேலைகளை செய்ய மாட்டேன். அவர்களின் மனதில் தோன்றும் அவர்களின் எண்ணப்படியே திருத்த வேலைகளை செய்வேன். எனது திருப்தி பெரிதல்ல. அவர்களின் திருப்தியே எனக்கு பெரிய தைரியத்தை வழங்குகின்றது.
படையினரின் பெரும் சமையல் பாத்திரங்களை நான் இன்றும் திருத்திக் கொடுக்கிறேன். ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், கம்பனிகளின் பாத்திரங்களும் எனது இப் பட்டறைக்கு வருகின்றன. ஐந்து, ஆறு மாடிகளுக்கும் மேல் சென்று கூரை மழைநீர் வடியும் பீலிகளையும் அமைத்து தருவேன். பழுது வேலைகளையும் செய்வேன். இதற்கே ஐந்து ஊழியர்கள் உள்ளனர்” எனத் தெரிவித்ததும் நாமும் வியந்துபோனோம்.
“இதைவிட வேறு எவ்வகையான திருத்த வேலைகளை மேற்கொள்வீர்கள்?” எனவும் கேள்வி தொடுத்தோம்.
“மண்ணெண்னை அடுப்பு, பழங்காலத்து பித்தளை விளக்குகள், பெற்றோல் மெக்ஸ், லாம்பு மற்றும் இட்லி சட்டி என பல வகை பாத்திரங்களையும் திருத்தி தருவேன். முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் குணசிங்கபுர வீட்டின் கூரையையும் பலமுறை திருத்தி கொடுத்துள்ளேன். சவூதியில் பதினைந்து வருடங்கள் சுவருக்கு வர்ணம் பூசுபவராக தொழில்புரிந்தேன். விபத்தின் காரணமாக நாடு திரும்பிவிட்டேன்” என அவர் பதிலளித்தார்.
“இத் தொழிலை உங்கள் பிள்ளைகள் கற்றுக் கொண்டுள்ளார்களா என கேட்டதும் படார் என பதில் கொடுத்தார். எனது 7 பிள்ளைகளில் ஒருவர் காலமாகிவிட்டார். ஏனையோர் இத் தொழிலை கற்று இருந்தாலும் இத் தொழிலை செய்ய முன்வர மாட்டார்கள். பலரும் வெளிநாட்டில் தொழில் புரிகின்றனர். இது போற்றத்தக்க தொழில். கற்றுக் கொண்டால் நல்ல வருமானத்தைப் பெறலாம். இத் தொழிலைக் கற்றுக்கொள்ள எவரும் முன்வருவதில்லை.
நவ யுகத்தின் வேகத்தால் இத் தொழில் போன்று பல தொழில்கள் எம்மை விட்டு மறைந்துவிட்டன” என அவர் தெரிவித்தார். அவரி விடைபெற்று வீதிக்கு இறங்கினோம். பழைய அலுமினியம் சட்டியை தூக்கியவாறு அப் பட்டறைக்குள் பெண்மணி ஒருவர் நுழைவதைக் கண்டு அவர் பேச்சின் நம்பகத்தன்மை எமக்குத் தெரிந்து வியந்து போனோம். “கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கு இல்லை” என்பது உண்மை தான்.
(படங்கள் கே.பி.பி.புஷ்பராஜா)
Post a Comment