"ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்திய, சம்பவத்திற்கு பின்னணியில் அமெரிக்காவின் சதித்திட்டம்"
துருக்கி எல்லையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திய ரஷ்ய போர் விமானத்தை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்திய சம்பவத்திற்கு பின்னணியில் அமெரிக்காவின் சதித்திட்டம் இருக்கிறது என ரஷ்ய ஜனாதிபதி பரபரப்பான குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்யா ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், சிரியா மற்றும் துருக்கி எல்லைகள் அருகே ரஷ்யாவிற்கு சொந்தமான Su-24 என்ற போர் விமானம் கடந்த செவ்வாய்கிழமை பறந்துள்ளது.
இந்நிலையில் துருக்கி எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி அந்த போர் விமானத்தை துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
எதிர்பாராத இந்த தாக்குதலில், அந்த போர் விமானத்தை இயக்கிய 2 விமானிகளும் விமானத்திலிருந்து பாராசூட் மூலமாக வெளியே குதித்துள்ளனர்.
Konstantin Murakhtin என்ற விமானியை ரஷ்ய மீட்பு ஹெலிகாப்டர் உயிருடன் மீட்டது. ஆனால், Oleg Peshkov என்ற விமானி தரையை அடைந்தவுடன் அங்குள்ள போராளிகள் அவரை சுட்டு கொன்றுள்ளனர்.
தனது நாட்டு போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதை தொடர்ந்து, துருக்கி நாட்டுடன் இணைந்து ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட மாட்டோம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் உடனடியாக அறிவித்தார்.
இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக நேற்று இரவு கிரெம்ளின் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் சந்தித்து நடந்துள்ளது.
இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டு பேசிய விளாடிமிர் புதின் அமெரிக்கா மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
’’சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானம் எப்போது, எந்த வழியாக பறக்கும் என்ற தகவலை அமெரிக்க அரசிடம் ஏற்கனவே அளித்திருந்தோம்.
ஆனால், இந்த ரகசிய தகவல்களை அமெரிக்க அரசு துருக்கி ராணுவத்திற்கு அளித்து திட்டமிட்டு அதனை வீழ்த்துவதற்கு துணையாக செயல்பட்டுள்ளது” என அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.
எனினும், விளாடிமிர் புதினின் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அமெரிக்க அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment