பிரதமர் ரணிலுக்கு வந்து குவிந்துள்ள அதிர்ச்சிகரமான 5000 முறைப்பாடுகள்
கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் காணாமல் போதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் பிரதமர் காரியாலயத்திற்கு 5000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பிரதமர் காரியாலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் விசேட பிரிவு ஒன்று பிரதமர் காரியாலயத்தில் நிறுவப்பட்டிருந்தது.
பெயர் குறிப்பிட்டும், பெயர் குறிப்பிடாதும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முறைப்பாடு செய்தவர்களில் படையினர் மற்றும் பொலிஸாரும் உள்ளடங்குகின்றனர்.
தமது முறைப்பாடுகள் குறித்து வெற்றிகரமான விசாரணை நடத்தப்பட்டால் குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டமை குறித்த வீடியோ ஆதாரங்களையும் சமர்ப்பிக்க முடியும் என முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் திகதி அனுராதபுரத்தில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட மதுஸ்க டி சில்வா என்ற வர்த்தகர் மற்றும் இருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ஒருவர் தீயிட்டு எரிக்கப்பட்ட வீடியோ காட்சிகளை சமர்ப்பிக்க முடியும் என முறைப்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
விமானிகளுக்கான பயிற்சி வழங்குவதாக மிஹின் லங்கா நிறுவனம் ஓய்வு பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் பேரனிடம் 50 லட்சம் பணம் வாங்கி உரிய பயிற்சி அளிக்காமை குறித்தும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களில் பங்களிப்புச் செய்த ஒப்பந்தக்காரர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை எனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் காரியாலய பொதுமக்கள் முறைப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment