ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை, கலைக்கும் அவசியம் எழவில்லை - பொதுச் செயலாளர்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை கலைக்க வேண்டிய அவசியமில்லை என கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால தெரிவித்துள்ளார்.
டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் அவர் தனது பொதுச் செயலாளர் பதவியின் கடமைகளை நேற்று பொறுப்பேற்றார். அதன் பின்னர் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் விஸ்வா வர்ணபால இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை கலைக்கும் அவசியம் எழவில்லை. கலைக்கப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் வெறும் கதைகளே தவிர உண்மையில்லை. கதைகளுக்கு அமைவாக அரசியல் கட்சிகளை வழிநடத்த முடியாது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சிகளுடன் எமக்கு எவ்வித முரண்பாடுகளும் கிடையாது. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயற்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரும்புகின்றது.
பல்வேறு கொள்கையாளர்கள், பல்வேறு இனவாதிகள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் குறித்து பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கவனம் செலுத்தாது என பேராசிரியர் வர்னபால தெரிவித்துள்ளார்.
Post a Comment