Header Ads



பெளத்தர் என்ற ரீதியில் மனத்தாங்கலுக்கு உட்பட்டாலும், மரண தண்டனையை விரும்பும் மைத்திரி

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் போதைப் பொருளை தம்வசம் வைத்திருப்போருக்கு எதிராக மரண தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மரண தண்டனைச் சட்டம் நாட்டில் உள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி எத்தகைய விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் சமூக நலனைக் கருத்திற் கொண்டு போதைப் பொருள் குற்றத்திற்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பெளத்தர் என்ற ரீதியில் மனத்தாங்கலுக்கு உட்பட நேர்கின்ற போதும் பிள்ளைகளினதும் பெற்றோரினதும் கனவு, மற்றும் நாட்டின் நற்பெயரைப் பாதுகாக்கும் வகையில் மரண தண்டனைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இப்பாகமுவ மத்திய மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும் பாடசாலை மாடிக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவமும் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் முன்னாள் பிரதியமைச்சர் சாந்த பண்டார உட்பட கல்விமான்கள், பெருமளவு ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

நமது இலங்கையர்கள் எந்தவொரு நாட்டு மக்களுக்கும் இரண்டாம் பட்சமான வர்களல்ல. உலகிலுள்ள கல்விமான் மற்றும் நிபுணர்களை எடுத்துக்கொண்டாலும் இலங்கையர் எவ்வகையிலும் அவர்களுக்கு இரண்டாம் பட்சமானவர்களல்ல.

ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த எமது வரலாறு அநுராதபுர யுகம், பொலனறுவை யுக கலாசாரத்தைச் சார்ந்துள்ளது. இவையனைத்தோடும் இணைந்ததாக எமது தனித்துவப் பெருமை உள்ளது. எனினும் உலகில் ஏனைய நாடுகளிலுள்ள மனிதர்களுக்கும் இலங் கையர்களுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. எமது மக்களுக்கு மத கலாசாரத்தி னூடாக கட்டி யெழுப்பப்பட்டுள்ள சிறந்த பண்புகள் உள்ளன.

எமது மக்களிடம் பிற மனிதரை அன்பு செய்யும் பண்பு உள்ளது. மனிதாபிமானம், கருணை, தியாக மனப்பான்மை போன்றவை எம்மவரிடமே அதிகமாக உள்ளது. வெளிநாடுகளில் இவற்றைக் காணக்கிடைப்பதில்லை.

சர்வதேசம் வியக்குமளவுக்கு பரித்தியாகத்தில் நாம் பெயர் போனவர்கள். வெசாக், பொசன் போன்ற பண்டிகைகளில் எம்மவர்கள் அமைக்கும் தானசாலைகளை இங்கு வரும் வெளிநாட்டவர் வியப்புடன் நோக்குகின்றனர். உலகின் மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட இத்தகைய பரித்தியாகங்கள் கிடையாது.

அந்த நாட்டவர்கள் தமது தொழில்நுட்ப வளர்ச்சி, பெளதீக வளங்களின் வளர்ச்சியைப் பெருமை பாராட்டுகின்றனர். எனினும் மனிதர்கள் என்ற வகையில் சமூகப் பழக்க வழக்கங்கள் பிறருக்கு உதவுதல் மற்றும் பரித்தியாகங்களில் நாமே உலகின் முன்னிலையில் உயர்ந்து நிற்கின்றோம்.

நாம் ஜனவரி மாதத்தில் தேர்தலின் போது வாக்குறுதியளித்தபடி நாட்டில் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொடுக்கும் கல்வி மறுசீரமைப்பை மேற்கொள் ளவுள்ளோம்.

பல்கலைக்கழக பட்டத்துடன் தொழில் வாய்ப்பின்றி போராட்டங்கள், ஆர்ப் பாட்டங்களில் ஈடுபடுவதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அது ஆர்ப்பாட்டக்காரர்களின் தவறல்ல எமது கல்வி முறையிலுள்ள குறைபாடே.

தற்போதுள்ள எமது சமூக பொருளாதார சூழலில் உலகம் பயணிக்கும் வேகத்துடன் நாமும் முன் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இன்று நவீன பொருளாதார முறையில் உலகம் முன்னேறி வருகிறது.

எமது நாட்டைப் பொருத்தவரை வருடாந்தம் மூன்றரை இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பாடசாலைகளில் இணைகின்றனர். எனினும் இவர்களில் இறுதியாக 25,000 பேரே பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்பு ஏற்படுகிறது.

அறிவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்திற்காக நாம் எமது கல்விக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டியுள்ளது.

ஒருபுறம் கல்வித்துறையில் கவனம் செலுத்துவது போல மறுபக்கம் சமூகத்தில் நிலவும் வேறுபாடான செயற்பாடுகள் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு செயற் பாடுகளுக்காக நானும் பிரதமரும் அமைச்சரவையும் விசேட திட்டங்களை வகுத்து செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

வடக்கில் மாணவி வித்யாவின் படு கொலையின் பின்னணியிலும் போதைப் பொருளின் பங்களிப்பு உள்ளதை நாம் உணர வேண்டும். இந்த மோசமான சம்பவம் முழு இலங்கையில் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

தற்போது சட்டப்படி அனுமதி பெற்று விற்பனை செய்யப்படும் மதுபானங்கள், அவை சாராயமோ, விஷ்கியோ, ப்ரண்டியோ, இவை அனைத்துமே சமூக சீரழிவிற்கே பயன்படுகின்றன. போதைவஸ்து உள்ளிட்ட போதைப்பொருட்கள் இதில் முக்கியமானவை.

கடந்த வாரத்தில் பாடசாலைச் சுற்றாடலில் விற்பனை செய்யப்படும் புதிய பானம் ஒன்றை பொலிஸார் கைப்பற்றினர். இத்தகைய மோசமான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் பிள்ளைகளின் எதிர்காலத்தையோ பெற்றோரின் கனவு களையோ கல்வியையோ பற்றி யோசிப் பவர்களல்ல.

எல்லா மதங்களும் நல்வாழ்வுக்கான போதனைகளையே செய்கின்றன. இத்தகைய மோசமான செயற்பாடுகளை இல்லாதொழிப்பதில் மதத்தலைவர்களின் பங்களிப்பும் பொறுப்பும் மிக முக்கி யமானது.

No comments

Powered by Blogger.