Header Ads



முஸ்லிம் அரசியலின் சிதைவும், தோல்வியும் - 2015 தேர்தலை முன்வைத்த ஒரு பார்வை..!

-எம். பௌசர்-

முஸ்லிம் காங்கிரஸ்  தலைவரின் மரணத்தின் பின் முஸ்லிம் காங்கிரஸ்  பல கட்சிகளாப் பிரிந்தது. காங்கிரஸ்  எனும் தாய் இயக்கத்தின் பெயரின் ஒரு பகுதியைத் தாங்கியும் , அஷ்ரப் அவர்களின்  நிழற்படத்தை வைத்தும் ரிசாத் பதியுதீன் , அதாஉல்லாஹ் போன்றோர் தனிக்கட்சிகளை உருவாக்கினர். ஒரு தேசிய தனித்துவ அரசியல் இயக்கத்தின் பலத்தினை உணர்ந்ததும் , அதன் பின்னால் திரண்டு நின்ற மக்கள் சக்தியின் வலிமையையும் இவர்கள்  உணர்ந்திருந்தனர். காங்கிரஸ்  என்ற பெயரை  தாங்க மறுத்தவர்களும், தேசியக் கட்சிகளில் போய் சேர்ந்தவர்களும் காணாமல் போயினர்.  ஹக்கீம் தலைமையிலான   சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அதாஉல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ் என்பன கலைக்கப்பட்ட பாராளுமன்றம் வரை பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்ததுடன்  அரசியல் தலைமைகளாவும் இருந்து வருகின்றனர். இவர்கள் முஸ்லிம் மக்களின் நலனும் உரிமையும் காப்பதே தமது இலட்சியம் என்கின்றனர். தமக்கு வாக்களிப்பதன் ஊடாகவே முஸ்லிம் சமூகத்திற்கு விடிவு என்கின்றனர். அதிகாரத்தினை அடைந்து கொள்வதற்காக மக்களை கூறு போடுகின்றனர். ஒருவரை ஒருவர் தோற்கடிப்பதே தமது அபிலாசை என சொல்வதை வசதியாக மறைத்து, சமூக, மக்கள் அபிலாசைகளாக திரித்து பொது மக்களை நம்ப வைத்தும் வருகின்றனர். எந்த நோக்கத்திற்காக முஸ்லிம் தனித்துவ அரசியல் உருவாக்கம் கொண்டதோ அந்த நோக்கிலிருந்து தடம் மாறி , ஒடுக்குமுறை பண்புகளைக் கொண்ட பேரினவாத அரசியல் தலைமைகளை அதிகாரத்திற்கு கொண்டு வரும் உள்ளூர் தரகர்களாக இந்தக் கட்சித் தலைவர்கள்  மாறி விட்டனர். 

ஒரு சாரார் ஐக்கிய தேசியக் கட்சியை சார்ந்தும், இன்னுமொரு சாரார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சார்ந்தும் தமது சொந்த அரசியல் வாழ்வை திட்டமிடுகின்றனர். இதற்காக, ஒரு தனித்துவ அரசியல் பாதையில் புறப்பட்ட மக்களை கட்சிகளின் பெயரினைப் பயன்படுத்தியும், அம்மக்களின் உண்மையான அரசியல் உணர்வினை கபடத்தனமாக ஏமாற்றியும் வருகின்றனர். பெறப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை வைத்து மாறி மாறி அதிகாரத்திற்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியிடமோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடமோ  முஸ்லிம் சமூகத்தின்  மீதான அரச ஒடுக்குமுறையின் கொள்கையிலோ செயற்பாட்டிலோ எந்த மாற்றத்தினையும் இவர்களால் கொண்டுவர முடியவில்லை. 

ஒரு சாரார் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில்  வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்கள்  மீது  நடைபெற்ற ஒடுக்குதலை  மறைக்க முற்படுகின்றனர். இன்னொரு சாரார் மகிந்தவின் காலத்தில் நடந்ததை திரிபடைய வைக்கப் பார்க்கின்றனர். அதற்கும் தமக்கும் சம்பந்தமில்லை என நிறுவப் பார்க்கின்றனர். மகிந்தவின் ஆட்சியில் இறுதிவரை மேற்சொன்ன மூன்று கட்சித்தலைமைகளும் அமைச்சர்களாக இருந்து, முண்டு கொடுத்துக் கொண்டிருந்ததை  அப்பாவி முஸ்லிம் மக்களின் அரசியல் பலவீனத்தால்,  தாம் தப்பித்து விட்டோம் என நினைக்கின்றனர்.

இன்றைய தேர்தல் கூட்டுகள்
உலகிலெங்குமே நிகழாத அரசியல் அபத்த நாடகமொன்று வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்களிடம் காட்சிக்கு வந்திருக்கிறது .அதாஉல்லாஹ்.ஹிஸ்புல்லாஹ் போன்றவர்கள் மகிந்தவின் இருப்பும் செல்வாக்கும் நாளுக்கு நாள் அசைக்க முடியாது வலுப் பெற்றுவரும்  சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமை தாங்கும் கூட்டு முன்னணியில் தேர்தல் கேட்கின்றனர். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் தேர்தல் கேட்கின்றனர். ஒரு மாவட்டத்தில் தனியாகவும், இன்னுமொரு மாவட்டத்தில் பிரிந்தும், மற்றுமொரு மாவட்டத்தில் அனைவரும் ஒன்றாகவும் தேர்தல் கேட்கின்றனர். 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  தலைமைகளுக்கு தேசியத் தலைமை ஐக்கிய தேசியக் கட்சியும்  ரணில் விக்கிரமசிங்கவும்தான். இதில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் வடக்கு கிழக்கு முஸ்லிம் பிரதேசங்களில்  வாக்காளர்களாகிய முஸ்லிம்கள் சில மாவட்டங்களில் யானைக்கு புள்ளடி போட வேண்டும் , சில மாவட்டங்களில் யானைக்கும் மயிலுக்கும் புள்ளடி போடுவது துரோகம் மரத்திற்கு போடவேண்டும், சில மாவட்டங்களில் யானைக்கும் மரத்திற்கும் புள்ளடி போடுவது துரோகம் மயிலுக்கு புள்ளடு போடவேண்டும், திருமலை  போன்ற மாவட்டத்திலும், இந்த இரு கட்சிகள்  ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கேட்கும் வடக்கு கிழக்குக்கு வெளியேயான மாவட்டங்களில் யானைக்கு மட்டும் போட வேண்டும் . அதாஉல்லா, ஹிஸ்புல்லா போன்றவர்கள்  வெற்றிலைக்கு மட்டும் போட வேண்டும். இந்த  பேரினவாத சார்பு  அரசியல் தனித்துவ முஸ்லிம் அரசியலை, முஸ்லிம்களுக்கான தேசிய அரசியல் இயக்கத்தினை  எங்கு கொண்டு வந்து இப்போது நிறுத்தி இருக்கிறது என்பதனை மதிப்பிடுவதற்கு இதனை விட அரசியல் ஆதாரம் வேறு ஏதாவது தேவையாக இருக்கிறதா அன்பான முஸ்லிம் மக்களே! 

எந்த முஸ்லிம் அரசியல் கட்சிக்கும்   உறுதியான கொள்கைகளை  முன் வைத்து முஸ்லிம் மக்களை அணி திரட்டி ஜே.வி. பி போன்று ஐக்கிய தேசியக் கட்சியையோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியையோ ஆதர்சனமாகக் காட்டாது  தனித்துவமாக இந்த தேர்தலை முகம் கொள்ள முடியவில்லை.  குறைந்த பட்சமாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்றாவது ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கு தலைமை தாங்குகின்ற  கட்சிகளின் அரசியல் பண்புடன்  தேர்தல்  கோரிக்கையை அரசியல் கோரிக்கையாக்கி மக்கள்  ஆணை பெறுவதற்கும்  அதனை மைய அரசியலை நோக்கிய அழுத்தமாக மாற்றுவதற்கும் தனித்து வடக்கு கிழக்கில்  தேர்தலில் போட்டியிடுவற்கு முடியவில்லை. இதுதான் உண்மையென்றால் தனித்துவ அரசியல்,   தேசிய அரசியல் இயக்கம், போன்ற கதையாடல்களுக்கு இன்னும் அர்த்தம் உள்ளதா?

அன்று இந்த ஐக்கிய தேசியக் கட்சியையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் நிராகரித்து தனித்துவ அரசியலின் தேவையை முன் நிறுத்தி எழுந்த ஒரு அரசியல் எழுச்சி ,சிதைவடைந்து கூர்மங்கி ஒடுக்குவோரை தலைமையாக ஏற்று சரணாகதி அடைந்த தோல்வியின் ஒரு பகுதி விளைவு இது. இந்த  ஏமாற்ற மிகு தோல்வியின் கண்ணீரிலிருந்து  முஸ்லிம்  தனித்துவ அரசியல் மீள உயிர்ப்பிக்குமா  என்பதை சமூக சக்திகள்தான் சொல்தல் வேண்டும்.  அரசியல் அறிவுள்ள, சமூக விடுதலையை முன்னிருத்தி  திரச்சியுற்ற ஒரு மக்கள்  பிரிவினர் மத்தியில் மிக இலேசாக இப்படி ஒரு மோசடி நாடகத்தினை நடாத்த முடியுமாக இருப்பின் ஒன்று இந்த மக்கள்  மிகப் பலவினமான அரசியல் அறிவு நிலையில் உள்ளார்கள் என்ற முடிவுக்கு நாம் வர வேண்டும் அல்லது ஏமாற்றும் இந்த தலைமைகள்  பலே கில்லாடிகளாக உள்ளனர் என்ற முடிவுக்கு வர வேண்டும். முஸ்லிம் வாக்காளர்களே உங்களிடம் ஒரு கேள்வியும் இல்லையா? . அரசியல் என்பது வெறும் உணர்ச்சிமட்டுமல்ல அதில் அறிவும் தார்மீக ஆவேசமும் சரியினை, தவறினை பகுத்தறியும்  நுட்பமும் உள்ளது என்பதை நாம் இன்னும் அறிந்து கொள்ளவில்லையா? நாம் எல்லோருமே சேர்ந்து முஸ்லிம் தனித்துவ அரசியலை குழி தோண்டிப் புதைத்து கபுறை மூடி  விட்டு வந்து விட்டோமா?

 இறைவா எதிரிகளை நான் பார்த்துக் கொள்வேன், நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று என்கிற ஒரு அர்த்தமுள்ள வாசகம் உள்ளது. இன்றைய முஸ்லிம் அரசியலைப் பொறுத்தவரை சமூகத்திற்கு வெளியிலிருந்து வருகின்ற ஒடுக்குமுறையையும் எதிர் நிலைப்பாட்டையும் முகம் கொள்ள முஸ்லிம் சமூகம் தயாராக உள்ளது, ஆனால் சமூகத்தினை காப்பாற்றப் போகிறோம் எனச் சொல்லும் இந்த ஏமாற்றமிகு  தலைமைகளிடமிருந்து சமூகத்தினை காப்பாற்ற நாம் இறைவனைத்தான் துணைக்கு அழைக்க வேண்டியுள்ளதுடன்,  முஸ்லிம் சிவில் சமூக மட்டத்தில் கோட்பாட்டு ரீதியான  அரசியல் முன்னெடுப்பினையும் அரசியல் மயப்படுத்தலையும் கட்சி நலன்களுக்கு வெளியே நின்று சமூக சக்திகள்   முன்னெடுக்க வேண்டி தேவையுமுள்ளது.

5 comments:

  1. கருத்து ரீதியாக முஸ்லிம்களுக்கு கட்சியும், தலைமைத்துவமும் ஒன்றுதான் இருக்க வேண்டும். பிற கட்சிகளுடன் சேர்ந்து கேட்பதால் தனித்துவம் இழந்து விடும் என்று கூற முடியாது. மாறாக தாங்கள் சார்ந்த கூட்டனியின் வெற்றி சம்பந்தமான ஒரு அம்சம்தான். அ இ ம க ஒரு ரிசாத்தின் கட்சி. அவருக்கு ஏதும் நடந்தால் அத்துடன் அக்கட்சி படுத்து விடும். ரிசாத்தின் அரசியல் பயணத்தை எடுத்து நோக்கினால் அவர் சேர்ந்திருந்த அனைத்து தலைமைத்துவத்தின் காலையும் வாரி விட்டு ஓடியவர். இப்போது ரணில், நிட்சயமாக இவரால் ரணிலுடன் சேர்ந்து பயணிக்க முடியாது. இரு பெரும் கட்சிகளும் முஸ்லிம் காங்கிரசின், முஸ்லிம்களின் அரசியல் பலத்தை குறைப்பதற்காக ரிசாத் பதுர்டீனை ஊக்கப் படுத்துகிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. முஸ்லிம் காங்கிரஸ் அப்படியான ஒரு கட்சி அல்ல.

    முதலில் தமிழர்களின் அரசியல் போராட்டமும் சரி ஆயுத போராட்டமும் சரி, அது தமிழ் மக்களுக்கான சரியான விடுதலை பாதையை அமைத்து கொடுத்துள்ளதா என்பதே விவாதத்துக்குரியது ஆகையால் அவர்களை முஸ்லிம் மக்களின் அரசியலோடு ஒப்பிட முடியாது. தலைமைத்துவத்தில் பிரச்சினை இருந்தால் அதில் மாற்றத்தை ஏற்படுத்துவதே சிறந்தது. மாற்று கட்சியை தோற்று விப்பது அபத்தமானது. இதுவே எமது பணிவான கருத்து.

    முஸ்லிம்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த பெளசர் அவர்களால் பதியப்படும் ஆக்கங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  2. உண்மையிலேயே நல்ல கட்டுரை.முஸ்லிம் தலைமைகளை நினைக்கும் போது வெட்கித்து தலைகுனிய வேண்டியுள்ளது.முஸ்லிம் அல்லாதவர்களிடம் உள்ள ஒற்றுமை நம்மவர்களிடம் ஏன் இல்லாமல் போனது மற்றவர்கள் நம்மை பார்த்து பின் பக்கத்தால் சிரிக்கிறார்கள் .

    ReplyDelete
  3. ஆக்கபூர்வமான கட்டுரை முஸ்லிம்கள் அரசியல் விழிப்படையாத வரை தலைமைகள் மாற்றமடைய வாய்ப்புகள் குறைவே

    ReplyDelete
  4. ஜே.ஆரின் விகிதாசார முறை வந்த பின்னர் இன்று வரை புத்தளம் மாவட்டம் ஒரு தமிழரையோ, முஸ்லிமையோ பாராளுமன்ற உறுப்பினராகப் பெறவில்லை. அதனை இலக்காகக் கொண்டு கடந்த ஒரு வருடமாக பீ.பீ.ஏ.எப் என்னும் அமைப்பு உழைத்து வருகிறது. ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு சுயேட்சையில் போட்டியிடுவதன் மூலம் சுமார் 50,000க்கும் குறைவான வாக்குகளால் ஒரு சிறுபான்மைப் பாரளுமன்ற உறுப்பினரைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை இந்த மாவட்டத்தில் எல்லா மூலை முடுக்குகளிலும் துளிர்விட்டிருந்த நிலையில்.....
    வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நிமிடம் வரை இந்த அமைப்பு வளராமல் தடுக்கும் ஏல்லா முயற்சிகளையும் ரிஷாதும் ஹக்கீமும் செய்து விட்டு இப்போது ரனில் வாக்குக் கேட்டு வரும் போது ஆளுக்கொரு ஹெலிக்கொப்டரில் பந்தாவாக புத்தளம் வந்து போகின்றனர். இது தான் தனித்துவ ராஜ பாட்டையில் புத்தளம் மாவட்ட சிறுபான்மை வாக்காளர்கள் கண்ட அடைவு!
    புத்தளம் மாவட்டத்தில் அப்படி ஒரு சிறுபான்மைப் பாராளுமன்ற உறுப்பினரை இம்முறை பெறும் பட்சத்தில் பேரினவாதக் கட்சிகளான நீலத்துக்கும் பச்சைக்கும் முஸ்லிம் தமிழ் வாக்குகளை இனியும் ஏமாற்றிப் பெறும் வழிவகைகள் இல்லாது போகும். எனவே அந்த பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு மிக வெளிப்படையாகவே இந்த இரு வோட்டுப் பொறுக்கிகளும் துணை போகின்றனர்!

    ReplyDelete

Powered by Blogger.