Header Ads



வித்தியாவின் படுகொலையை அடுத்து இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளுக்கு பின்னால் அரசியல் ஆதாயங்கள் உண்டு - நீதியமைச்சர்

நாட்டில் சட்டம் ஒழுங்குகளை நிலைநாட்டுவதிலும், நல்லாட்சியை தொடர்ந்து பேணுவதிலும் எமது அரசாங்கம் உறுதியான நிலையை பேணிவருகிறது. வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி விடயத்தில் நியாயமான முறையில் விசாரணை நடைபெறும் என நீதியமைச்சர் கலாநிதி விஜேயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் - இந்த நாட்டின் வடக்கு கிழக்கு என அனைத்து பாகங்களிலும் எந்த வித இடையூறுகளுமின்றி நீதியை நிலைநாட்டி சட்ட ஒழுங்கைப் பேணுவதில் நாம் உறுதியாகவுள்ளோம். யாழ்ப்பாணம் புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட 18 வயதான பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா விடயத்திலும் நீதி நிலைநாட்டப்படும்.

ஆனால் இப்பெண்ணுக்கு இடம்பெற்ற துரதிஷ்டவசமான செயல்களை கண்டித்து யாழில் இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு பின்னால் அரசியல் ஆதாயங்கள் உண்டு எனவும் அரசியல் செல்வாக்கு இடம்பெறுகிறது எனவும் கூறபப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாததொன்றாகும்.

ஆனால் சிலர் இதனை வைத்து அரசியலில் ஆதாயம் தேட முற்படுகின்றனர். இந்த வகையான செயல்களின் மூலம் மக்களுக்கிடையிலான நல்லிணக்கத்தினை குழப்ப முற்படுகின்றனர். இனங்களுக்கிடையில் முறுகல்களை ஏற்படுத்துவதனூடாக  நாட்டில் பிரச்சினையை தோற்றுவிக்க சிலர் முற்படுகின்றனர். இவையனைத்தும் நல்லாட்சியை குழப்புவதற்காக தோற்றுவிக்கப்படுகின்ற விடயங்களே என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எந்தவொரு மனசாட்சியுள்ள, பெண்ணை தனது சகோதரியாக தாயாக மதிக்கும் யாராலும் இத்தகைய படுபாதக செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களது கோபம் நியாயமானது. அவர்கள் படும் வேதனையை வார்த்தையால் கூறமுடியாது. அதனால்தான் அப்பிரதேச மக்கள் ஆக்ரோஷமடைந்தனர். இது சூழ்நிலையால் ஏற்பட்ட விடயம். ஆனால்  யாழ் நீதிமன்றம் தாக்கப்பட்டமை - பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நிலையங்கள் தாக்கப்பட்டமை என்பன அத்துமீறிய செயல். அதற்காகதான்  130 ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் கைது செய்தனர் என அமைச்சர் தெரிவித்தார்.

இவ்விடயத்தில் பொலிஸார் நடுநிலைமை வகித்து தமது கடமையை செய்துள்ளனர். அவ்வகையில் வித்தியா கொலை வழக்கிலும் சந்தேக நபர்களாக கருதப்படும் 9 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களுள் 03 பேர் முதலில் கைது செய்யப்பட்டு பின்னர் - அவர்களது வாக்கு மூலத்தினை கொண்டு மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இறுதியாக ஒன்பதாவது நபர் கொழும்பு - வௌ்ளவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு - தற்போது யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களை கடந்த 20ஆம் திகதி நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றவேளை ஆத்திரமடைந்த மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ததுடன் வன்முறைகளிலும் ஈடுபட்டனர்.

இதன் போது கடமையை செய்த பொலிஸார் காயமடைந்தனர். தொடர்ந்து நீதிமன்றம் பொலிஸ் நிலையம் என்பன சேதமாக்கப்பட்டன. எனினும் சிறிது நேரத்தில் பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.