Header Ads



அம்பாறைக்கு தமிழ் பேசும் மாவட்ட செயலாளரை, நியமிக்க நடவடிக்கை எடுங்கள் - ஆரிப் சம்சுதீன்

-ஏ.பி.எம்.அஸ்ஹர்-

அம்பாறை மாவட்டத்துக்கு தமிழ் பேசும் மாவட்ட செயலாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுரிடம் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கிழக்கு மாகாணம் தமிழ்பேசும் மக்கள் அதிகளவில் வாழும் மாகாணமாகும். இம்மாகாணத்தில் வாழுகின்ற மக்கள் அரச கரும மொழியான தமிழ் பொழியிலேயே தமது நிர்வாக கடமைகளைப் புரிவதுடன்; அம்மொழியினூடாக தமது நிர்வாகத் தொடர்புகளையும் முன்னெடுத்து வருகின்றனர் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களான தமிழர்களும் முஸ்லிம்களும் ஏறக்குறைய 60 வீதம் வாழுகின்றனர். 

இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தின் மாவட்ட செயலகம் சிங்கள மக்கள் வாழும் பிரதேசமான அம்பாறை நகரில் உள்ளது. மாவட்ட செயலாலளரும் சிங்கள மொழி பேசுபவராக உள்ளார். அம்பாறை மாவட்டத்தின் அம்பாறைத் தேர்தல் தொகுதி தவிர பொத்துவில், சம்மாந்துறை மற்றும் கல்முனை ஆகிய 3 தொகுதிகளிலும் வாழும் மக்கள் தமி;ழ் பேசும் மக்களாவர் இம்மக்கள் தமது நிர்வாகத் தேவைகளை, சேவைகளை நிறைவு செய்வதற்காக அம்பாறை நகரிலுள்ள மாவட்ட செயலகத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது. 

இவ்வாறு செல்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதுடன் மொழிப்பிரச்சினை காரணமாக பெரிதும் அசௌகரியங்களையும் சந்தித்தித்து வருகின்றனர். இந்நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, அம்பாறை மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக தமிழ் பேசும் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இவ்வாறு விடுக்கப்பட்ட கோரிக்கையானது மக்கள் நலன் கருதியே கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் இதனை இனவாத ரீதியில்  நோக்க வேண்டாமென ஆளுனரிம் எடுத்துரைத்ததாகவும் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் மேலும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.