Header Ads



வலிப்பு வந்தால், இரும்பு பொருட்களை கொடுப்பது ''மூட நம்பிக்கை''

மூளையில் உள்ள நரம்பு செல்கள் உட்பட உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம் நரம்பு செல்கள் தேவையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணு தன்மையை வெளிப்படுத்தும் விளைவே வலிப்பு நோயாக பாதிப்பு ஏற்படுத்துகிறது. மூளை பகுதிகளில் விபத்து, நோய், அறுவை சிகிச்சை போன்றவற்றால் தழும்புகள் ஏற்பட்டு இருந்தாலோ, ரத்த கசிவு, தொற்று, மூளையில் பூச்சிகட்டி, மூளை காய்ச்சல் போன்றவற்றால் இந்த வலிப்பு நோய் ஏற்படுகிறது.

எந்த வயதிலும், யாருக்கு வேண்டுமானலும் வலிப்பு ஏற்படலாம். ஆயிரம் பேரில் 3 அல்லது 5 என்ற அளவில் இந்த பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர் என்று ஆய்வு தகவல்கள் தெரிவிக்கிறது. வலிப்பு நோய் என்பது சமூகத்தில் ஒரு புறக்கணிக்கப்படும் நோயாக கருதப்படுகிறது. இது குறித்த போதிய விழிப்புணர்வு இன்றளவும் மக்களிடையே இல்லை என்பதே உண்மை நிலை. இன்றைய சமூகத்தில் தற்போதும் வலிப்பு நோய்க்கு கைகளில் சாவி, கத்தி, சங்கிலி போன்றவைகள் கொடுக்கும் பழக்கம் உள்ளது. இது முற்றிலும் தவறான மூட நம்பிக்கை. 

வலிப்பு ஏற்படும் போது அதற்கான முதலுதவி செய்து உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். இந்த நேரங்களில் பாதிக்கப்பட்ட நபரை 3 அல்லது 4 நிமிடம் ஒரு நிலையாக படுக்கவைத்து அவரின் உடைகளை தளர்த்தி விடவேண்டும், காற்றோட்டத்தை விடவேண்டும், வலிப்பின் போது நாக்கை கடித்துக்கொள்வார்கள் அதனை செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக இத்தகைய பாதிப்புக்கு உள்ளாவோர் தொடர்ந்து 3 அல்லது நான்கு ஆண்டுகள் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ளவேண்டும். 

இதற்கான மருந்துகள் அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கின்றது. நூற்றில் 3 பேர் அலட்சியத்தின் காரணமாகவே இறந்துவிடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போதும் ஒரு துணை அவசியம். வலிப்பு வருபவர்களை வேலைக்கு அமர்த்தவோ, பள்ளிகளில் சேர்க்கவோ, திருமணம் போன்ற பல்வேறு சூழலில் ஒதுக்கப்படுகின்றனர். வலிப்பு நோய் வந்த 70 சதவீதம் பேர், மாத்திரை, ஊசிகள் மூலம் குணமடைகிறார்கள். 30 சதவீத பேருக்கு அறுவை சிகிச்சை முறை அவசியப்படுகிறது என்கின்றனர் நரம்பு தளர்ச்சி மருத்துவர்கள்.

No comments

Powered by Blogger.