அழிந்து வரும் தேனீக்களால், மனிதர்களுக்கு ஊட்டச்சத்து இழப்பு
'தேனீ, வண்ணத்துப்பூச்சி போன்ற பூச்சி இனங்கள் அழிந்து வருவதால், வளரும் நாடுகள் சிலவற்றில், பாதி அளவுக்கும் மேற்பட்ட மக்கள், ஊட்டச் சத்து குறைபாடுகளுக்கு ஆளாக நேரிடும்' என, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிரினங்கள், மலர்கள் மேல் அமரும் தேனீ, வண்ணத்துப் பூச்சி போன்ற பூச்சியினங்கள் மூலம், மகரந்த சேர்க்கை நிகழ்கிறது. இதில், பயிரினங்களுக்கு குறிப்பிடத்தக்க ஊட்டச் சத்து கிடைக்கிறது. இத்தகைய பயிர்கள் மூலம் கிடைக்கும் உணவுப் பொருட்கள், ஊட்டச் சத்து கொண்டவையாக உள்ளன. அவற்றை உண்ணும் மனிதர்களும், இதனால் பயன் பெறுகின்றனர்.
அவ்வாறின்றி, தேனீ போன்ற பூச்சியினங்களின் அழிவால், மகரந்த சேர்க்கை குறைந்து, ஊட்டச் சத்தை இழக்கும் பயிர் உணவுகளை உண்பவர்கள், 'வைட்டமின் ஏ' குறைபாடுக்கு ஆளாவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஊட்டச் சத்து குறைவால் கண் பார்வை இழப்பு மற்றும் மலேரியா போன்ற நோய்களின் தாக்கத்திற்கு மக்கள் ஆளாவதாகவும், சில நோய்களால் மரணம் கூட ஏற்படுவதாகவும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாம்பியா, மொசாம்பிக், வங்கதேசம், உகாண்டா ஆகிய நான்கு நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. அந்நாட்டு மக்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளின் அடிப்படையில், ஆய்வு முடிவு வெளியிடப் பட்டுள்ளது. பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்தால், அது வளரும் நாடுகளை சேர்ந்த மக்களின் ஊட்டச் சத்து குறைபாட்டிற்கு வழி வகுக்கும் என, அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Post a Comment