Header Ads



மட்டக்களப்பில் மதங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்த சதி - ஹிஸ்புல்லா

மட்டக்களப்பில் மதங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்தவே தீய சக்திகள் உருவச்சிலைகளை உடைத்துள்ளன. இது வன்மையாக கண்டிக்கப்படல் வேண்டும் என சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். அவர் இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு நகரின் மத்தியிலும் நகரை அண்டிய பகுதிகளிலும் இந்த உருவச் சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இது ஒரு வேண்டத்தகாத செயலாகும். இதைச் செய்தவர்களை பாதுகாப்புத் தரப்பினர் கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மட்டக்களப்பில் மதங்களுக்கிடையில் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கி சமூகங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்தவே மட்டக்களப்பில் வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த நான்கு உருவச் சிலைகளும் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான நாசகார வேலைகளை சந்தர்ப்பமாக சிலர் பயன்படுத்த முனைகின்றனர். மட்டக்களப்பு நகரின் மத்தியில் நாற்பது வருடங்களுக்கு மேலாக மகாத்மா காந்தியின் உருவச்சிலை இருந்து வருகின்றது. அதேபோன்று சேதப்படுத்தப்பட்டுள்ள அனைத்து உருவச் சிலைகளுமே நீண்ட வரலாற்றுப் பின்னணியை கொண்ட பெரியார்களின் உருவச்சிலைகளாகும்.

மகாத்மா காந்தி அனைத்து சமூகங்களினாலும் சமயங்களினாலும் மதிக்கப்படும் மனிதராகும். இவரின் உருவச்சிலை உட்பட ஏனையவர்களின் உருவச்சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் எனது கண்டனங்களை தெரிவிப்பதுடன் கவலையும் அடைகின்றேன். தீய சக்திகளின் இவ்வாறான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டுமெனவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.