Header Ads



அல்லாஹ் அக்பர்,, வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - பகுதி 2

(யஹியா வாஸித்)

1983 க்கு முதல் எங்கள் கதையே வேற டைப், ஒரு குட்டி கட அல்லது மூன்டேக்கர் வயல்காணி, நாலு மாடு, பத்து ஆடு,ஒரு மீன்பிடி வல, ஒரு தோணி, மிஞ்சி மிஞ்சி போனா ஒரு   பதினாலடி பைபர் கிளாஸ் போட்டு. கொஞ்சம் டீச்சர்ஸ். இது கிழக்கில்.

வடக்கிலோ ஒரு பழைய ஓட்டை பைசிக்கிள், குட்டி குட்டி பழைய இரும்பு கடைகள்,  மெல்லிதா ஒரு இறைச்சிக்கடை, ரெண்டே ரெண்டு பேர் மட்டுமே உட்காரக்கூடிய தையல்   மசின் கடை அத்துடன்இந்தியாவுக்கு தொண்ணூறு நிமிடத்தில் போகக்கூடிய அதிசக்தி வாய்ந்த ( 3 இஞ்சின் )  பைபர் கிளாஸ் போட்டு.

இந்தியாவின் ராஜா பீடி அதனுடன் போட்டிபோட்டுக்கொண்டு தானா பீனா சொக்கலால்   ராம்சேட் பீடி, பழையகாட் சாறன் என யாழ்ப்பான சோனவன், வல்வட்டிதுறையானின் துணையுடன் கொண்டு  வந்து  அசத்துவான். யாழ்ப்பாணத்து முபீன் காக்கா எண்டா, எங்களுக்கெல்லாம் ஒரு கெத்து  ஏறும். அவர் ஒரு குட்டி எம்ஜீஆர்.  ஒரு குட்டி லொறி, அம்பாசிடர் கருப்பு கார் அல்லது ஒரு மைனர் கார்,கொஞ்சம் பேன்சி  பொருட்கள், அந்த ஓட்டை வண்டிகளில், இந்த பேன்சி பொருட்களை  ஏற்றிக்கொண்டு வடகிழக்குக்கு கொண்டுவந்து, விற்றுவிட்டு செல்பவர்கள்தான் வடகிழக்கிட்கு வெளியே  உள்ள முஸ்லிகள்.

வடகிழக்கு முஸ்லிம்களுக்கும், தென்மேற்கில வசித்த முஸ்லிம்களுக்கும் இருந்த இன்னொரு தொடர்பு   அரச உத்தியோகத்தர்கள், குறிப்பாக ஆசிரியர்கள். இவர்கள் அவர்களின் வீடுகளில்கூ லிக்கு இருப்பதும், அவர்கள் இவர்களின் வீடுகளில் கூலிக்கு இருப்பதும், அங்கிருந்து மரக்கறி,  தேன் போத்தல், இங்கிருந்து அரிசி, அவல் பார்சல் என ஒரு மெல்லிய தொடர்பு எப்போதும்  இளையோடிக்கொண்டிருக்கும்.

நாங்கள் அனைவரும், இலங்கை முழுவதும் உள்ள முஸ்லிம்கள் அனைவரும், எங்களை ஸ்ரீலங்கா  முஸ்லிம்கள் என அழைத்து கொள்வோம், அழைத்துக்கொண்டோம். 

இதையெல்லாம் தாண்டி இன்னும் மூன்று வகையான முஸ்லிம்கள் ஸ்ரீலங்காவின்   சில பகுதிகளில் ரொம்ப கெத்தாகவும், சிங்கள அரச இயந்திரங்களுக்கு பாரிய சொத்தாகவும்   வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

போறா முஸ்லிம்ஸ், இவர்கள் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்கள், கொழும்பு பிட்டகொட்டுவ மார்க்கெட்டின் அன்றாட வியாபாரத்தையும், யாழ். பெரிய ஆஸ்பத்திரிக்கு பக்கத்தில் உள்ள   அணைத்து வாசனை திரவியங்கள் ( கறுவா, ஏலம்,மிளகு,சாதிக்காய் ) இந்தியாவில் இருந்து  வள்ளங்களில் போகும்,வரும் சரக்குகளின் தலை விதிகளையும் இவர்களே  தீர்மானித்தார்கள்.

எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டார்கள், கொழும்பு சிங்கள அரசியல் தலைவர்கள் இவர்களின்  ஜோல்னா பைகளுக்குள் இருந்தார்கள்,ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டு  திரியும் எங்களை இவர்கள், அய்ந்து சல்லிக்கும் கணக்கெடுப்பதில்லை. ஆம் இவர்கள்  பாணியில் சொல்வதானால், வீ ஆர் நாட்  அ ப்ரோபர் முஸ்லிம்ஸ்  ??????

ஜாவா முஸ்லிம், தங்கல்ல, ஹம்மான்தொட்டே, கொழும்பு ராஜகிரிய, வத்தள இதுதான் இவர்களது 
இருப்பிடம். கம்பீரம், நடையில் ஒரு மிடுக்கு, கூடியவரை நுனிநாக்கு ஆங்கிலம், வெஸ்ட்ரன் டைப்பில்  உடை, சிங்களமும் தமிழும் இவர்களுக்கு கைவந்த கலை. இவர்களில் தொண்ணூற்றி  அயிந்து சத விகிதம்பேர் பாதுகாப்பு தரப்பில் பணி புரிவார்கள். புரிந்தார்கள், புரிகின்றார்கள்.

இவர்களுக்கும் இந்த சிறிலங்காவில் வாழும் எங்களுக்கும் எந்த தொடர்புமே கிடையாது, எங்களை இவர்கள்  மனிதனாக மதிப்பதே இல்லை,அவர்கள் ஒரு தனி ரகம். இவர்களில் பலர் பயங்கர பக்திமான்கள்.

நம்ம வன்னி ராஜாக்கள் காலத்தில், பிடி பட்ட அனைவரையும் விசாரித்தது தொடக்கம்,  வன்னிக்காட்டுக்குள் நுழைந்து உயிர்களை பணயமாக வைத்து உளவு வேலை செய்தவர்கள்  இந்த ஜாம்பவான்களே.

இந்த விபரம் தெரியாமல் நம்ம இளவல்கள், சோனவன் காட்டிக்கொடுத்துட்டான், சோனவன் வெடி வைச்சிட்டான்  என சொல்லி, சாறன் விற்க போனவன், லாம்பெண்ணை விற்க போனவன்,அரிசி யாவாரத்துக்கு போனவன் எல்லோரையும் போட்டு தள்ளி, நாங்க வேற நீங்க வேறடா  என சொல்லாமல் சொல்லி, எங்களுக்கு லாடம் அடித்தார்கள்.

மாக்கீன்  மார்க்கார், ஜாயா, நைனார் மரைக்கார், பதியுடீன் மஹ்மூத், அலவி மௌலானா குரூப்.
புல்லுக்கும் நோகாமல், காலுக்கும் நோகாமல் நடந்து, எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி
போட்டுக்கொண்டு, தங்களது புள்ள, குட்டி, குட்டிட குட்டிகளுக்கு, வெளி நாடுகளிலும், 
உள்நாட்டிலும் சொத்துக்கள் சேர்த்து வைத்து விட்டு, வேடிக்கை காட்டிய வள்ளல்கள்.

செல்வாக்கு மிக்கவர்கள், சொல்வாக்கு தவற மாட்டார்கள். இவர்களை பொறுத்தவரை நாங்கள் 
கிட்டதட்ட தேர்ட் கிளாஸ் பீப்பிள். ஒரு அரச உத்தியோகம் எடுப்பதற்காக தேனும், திணை மாவும் 
கட்டிக்கொண்டு இவர்கள தேடிச் சென்றால், வீட்டுக்கு வெளியே உட்கார வைத்து, சிங்கள 
மந்திரிக்கு ஒரு ரெக்கமெண்டேசன் லெட்டர் எழுதி தருவார்கள். இவர்களுக்கும் எங்களுக்கும் 
உள்ள தொடர்பு அவ்வளவுதான்.

ஆனால், வட கிழக்கு முஸ்லிம்களுக்கும், தென் மேற்கு முஸ்லிம்களுக்கும் இடையில் ஒரு பாரிய 
இடைவெளி புரையோடிப்போயிருந்தது, ஆம் அது திருமண, சம்பிரதாய சடங்குகள்.

இங்கு வடகிழக்கில், எவ்வளவுதான் இஸ்லாம் பேசினாலும், எவ்வளவுதான் அவர் உலக நாகரீகம்  தெரிந்தவராக இருந்தாலும், எவ்வளவுதான் சொத்துபத்துக்களுக்கு அதிபதியாக இருந்தாலும், சீதனம், பெண் வீட்டாரிடம் சீதனம் பெறுவது, தாலி கட்டுவது, திருமண சடங்கை ஊரையே  கூட்டி, வெடில் கொளுத்தி, ஆர்ப்பாட்டமாக செய்வது என்பது ஒரு விதியாகவே இருந்தது.

இதே சம்பிரதாயத்தை, "எங்களுக்கு ஒன்றுமே  வேண்டாம், ஒங்குட புள்ளைக்கு குடுக்கிறத நீங்க  குடுங்க, எங்களுக்கு ஒண்டும் வேணாம்"  என்ற இந்த வார்த்தைகளை, உசிலம்பட்டி, கொட்டாம்பட்டி, மேலூர்,மதுரை, மாட்டுத்தாவணி, கல்லல், காரைக்குடி,பேராவூரணி, தூத்துக்குடி,குளிகைமாற்று பட்டினம்,  காயல்பட்டினம் போன்ற இடங்களில் வசிக்கும் ஹிந்து, தமிழ் மாப்பிள்ளை வீட்டார் , திருமணத்துக்கு முதல் நாட்களில்  பெண் வீட்டாரிடம் உரிமையுடன் சண்டையிட்டு பெறுவதை எண்ட கண் குளிர கண்டு,  காது குளிர கேட்டிருக்கின்றேன். சம்தின்க் ரோங், சம் வெயார். என யோசித்தும் இருக்கின்றேன்.

இத போய் நம்முட வாப்பா, உமாக்கிட்ட கேட்டு வேலல்ல,சாச்சியிடம்தான் போய் கேட்கலாம், அவதான்  நம்முட கேர்ல் பிரெண்ட் அண்ட் வில்லி, உம்மா வாப்பாக்கிட்ட போட்டுக்கொடுக்கிரதுல கில்லி,  But, still i love her,அந்த சாச்சி மட்டும் இப்ப உயிரோடு  இருந்திருந்தால்,  நான் இப்படி ரோட்டு ரோட்டா, தெரு தெருவா,நாடு நாடா, அகதியாக ஓடிக்கொண்டிருக்க மாட்டேன்,  அவட மடியில படுத்துக்கிட்டு, அவக்கிட்ட பால் குடிச்சிக்கிட்டு,ஒரு குட்டி வாழ்க்கை வாழ்த்திருப்பேன்.

போய் கேட்டேன், வாய பொத்திக்கி  இரிடா  நாயே, நீயே  ஒழுங்கா பள்ளிக்கு தொழப் போறேல்ல
அதுக்குள்ள நியாயம் பேச வந்துட்டார்,  என்று சொல்லி என்  வாயை ஒரே அடியாக லாக் பண்ணி விட்டார்.   யெஸ் இஸ்லாம் பற்றி கேள்வி கேட்க எனக்கு எந்த ரைட்ஸ் உம் இல்லை.  கிட்டதட்ட நான் ஒரு ????

தென் மேற்கிலோ திருமண சடங்குகள் நோ சீதனம், நோ தாலி கட்டுதல், பள்ளிவாசல்களில் மகர் கொடுத்து   கல்யாணம், மாப்பிள்ளைதான் எல்லாமே என்ற தோரணையில் நடந்தது, நடக்கின்றது. அயிந்து சதமும்  பெண்வீட்டாரிடம் வாங்க மாட்டார்கள்.

இது இந்த திருமண முறை எனக்கு தெரிந்த இஸ்லாத்தில் கூறப்பட்டாலும், கன்னியாகுமரி, நாகர்கோயில்,
திருவனந்தபுரம், பீமா மசூதியை அண்டிய பகுதிகள்,கொச்சின், காலிகட், கண்ணனூர் பகுதிகளில் வாழும் 
ஹிந்துக்களும், முஸ்லிம்களும் இவ்வாறே நடந்து கொள்கின்றார்கள். 

என்ன கூத்திது, நாங்க முஸ்லிம்கள் என்று சொல்கின்றோம், எங்கிட பூர்வீகம் எது எண்ட ஒரு எழவும்வெளங்கிதில்ல.  வந்தவன், வாறவன், போறவன் குறிப்பாக அரசியலில் வந்தவன், வாறவன், போறவன்,
திண்டவன்,குடிச்சவன், (சொத்து / பேர் / புகழ்  ) சேர்த்தவன் எல்லாரும், ஏய் !டேய் !!    நீங்கள் இந்த நாட்டில சப்ஜெக்ட்டே கிடையாதுடா என்கின்றான்.

மகியங்கனையில இருக்கின்ற ஊரி வரியகே வன்னியா ( வேடுவர் தலைவர் ) வாயே தொறக்க காணோம்.

1983 வரை தாயும் பிள்ளையுமாக , வாயும் வயிறுமாக, தீ மிதிப்புகளும், கொடியேற்றங்களுமாக, புரியாணிகளும்,வட்டிலாப்பங்களுமாக, வெசாக் கூடுகளும், கந்தூரிக்களுமாக,வாழ்ந்து, வளர்ந்து, கழித்து, மகிழ்ந்த சமூகங்கள் கிழித்தெறியப்பட்ட காகித சிதறல்கள் போல் !!!!!!!!

எல்லா, ஸ்ரீலங்கா முழுக்க உள்ள மொத்த பள்ளிவாசல் தலைமை பீடங்கள், மெளலவிக்கள், அவ்லியாக்கள்,  அம்பியாக்கள், ஹாபீஸ்கள், ஹஸ்ரதுக்கள்,சேகுக்கள் எல்லோரிடமும் கால்ல உளுந்து, கெஞ்சி கேட்கின்றேன் ?
Who am i please ?

அயிந்து நேரம் தொழுது, காலை ஏழுமணி முதல், மாலை ஆறுமணிவரை கூலிவேலை செய்து, கிடைக்கின்ற  ஆயிரத்து நூறு ரூபாயில், தொள்ளாயிரம் ரூபாய்க்கு கறி புளி வாங்கிக்கொண்டு வந்து, பொண்டாட்டியை ஆக்க சொல்லிவிட்டு, ஸ்கூலுக்கு போற ரெண்டு புள்ளைகளைகளுக்கும் நூறு ரூபாயை கொடுத்துவிட்டு,   
மீதி நூறு ரூபாவை  யாருமே துணையில்லாமல் இருக்கும் அடுத்த வீட்டு பெரியம்மாவுக்கு கொடுத்து விட்டு 
நிம்மதியாக குறட்டை விட்டு தூங்கும் நான் ? யார் ? நான் ஒரு முஸ்லிமா ?

என்னை, இந்த பாவியை, உங்களது  இஸ்லாம் அரவணைத்து கொள்ளுமா ?

1983 ஜூலை கலவரத்துக்கும், முந்தாநாள்  2019 ஏப்ரல் 2 1 இல் வெடித்து சிதறிய, மொத்த சோனவனின்  மானம் மரியாதைக்கும்,  முழி முழியென முழிக்கும் நமது அரசியல் வஸ்தாதுகளுக்கும் என்ன தொடர்பு ????

( அல்ஹம்துலில்லாஹ், எண்ட அல்லாஹ் நாடினால் தொடருவேன்................ ) 

No comments

Powered by Blogger.