Header Ads



மக்காவுக்கு அருகில் சவூதி படை அதிரடி - 4 தீவிரவாதிகள் பலி


மெக்கா நகருக்கு அருகே தளமமைத்து செயல்பட்டுவந்த தீவிரவாத அமைப்பு ஒன்றை தமது பாதுகாப்புப் படையினர் தகர்த்துள்ளதாக சவுதி அரேபியா கூறியுள்ளது.

ஐ எஸ் அமைப்புக்கு எதிராக சவுதி கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் அந்தத் தீவிரவாத வலையமைப்பின் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.

இஸ்லாமிய அரசு என தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பின் அந்த உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் பலமணி நேரங்கள் மோதல்கள் நடைபெற்றன என்று சவுதி ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த மோதல்கள் மெக்காவின் புறநகரில் இடம்பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு சவுதி அரேபியாவுக்குள்ளே ஷியா பள்ளிவாசல்கள் உட்பட பல இடங்களில் தாங்கள் தாக்குதலை நடத்தியதாக ஐ எஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

ஐ எஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பது, சிரியா அல்லது இராக்கில் போரிடப் போவது ஆகியவைக்கு எதிராக கடுமையான புதிய நடவடிக்கைகளை அண்மையில் சவுதி அரேபிய அதிகாரிகள் அறிமுகப்படுத்தினர்.

No comments

Powered by Blogger.