அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் றிசாத், கைது செய்யப்படலாம் - அமீரலி தகவல்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் இரண்டு நாட்களில் கைது செய்யப்படலாம். அதற்கான வேலைகள் நடைபெறுகின்றன என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேசத்தில் மதீனா மீனவ சங்கத்தின் ஏற்பாட்டில் தன்னை ஆதரித்து செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்திலே இருந்த முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்க வேண்டும் என்று பௌத்த வாதத்தை தூண்டுகின்ற அதற்குள் இருந்து கொண்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரசாரம் செய்து முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று சித்தரித்துக் காட்ட அவர்களுக்கு தேவை உள்ளது. கடந்த காலத்தில் இருந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அரைக்கு அரைவாசியாக கொண்டுவர வேண்டும் என்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலே விசேடமாக வண்ணத்திப் பூச்சியிலே ஹிஸ்புல்லாவை களமிறக்கியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிடைக்கவுள்ள இரண்டு முஸ்லிம் ஆசனங்களை குறைக்கவே இவர்கள் வண்ணாத்திப் பூச்சியில் களமிறங்கப்பட்டுள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியவற்றிக்கு மாத்திரமே ஆசனங்கள் உள்ளன. வேறு எந்த கட்சிகளுக்கும் ஆசனம் கிடையாது.
சிலவேளைகளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் இரண்டு நாட்களில் கைது செய்யப்படலாம். அதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment