சஜித் தரப்பினரின் வேட்புமனுக்களை, நிராகரிக்குமாறு கோரி நீதிமன்றில் மனுதாக்கல்!
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக தாக்கல்செய்துள்ள வேட்புமனுக்களை நிராகரிக்குமாறு கோரி அடிப்படை உரிமைமீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த அடிப்படை உரிமைமீறல் மனுவை ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த மனு மே மாதம் 18, 22 அல்லது 28ம் திகதிகளில் விசாரணைக்கு அழைக்கப்படவேண்டும் என்று மனுதாரரின் சட்டத்தரணி கோரியுள்ளார்.
இந்த மனுவில் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச , கட்சியின் செயலாளர் ரஞ்சித மத்துமபண்டார உட்பட்டவர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி, தேர்தல் வேட்புமனுக்களை “அபே ஜாதிக பெரமுன” என்ற பெயரிலேயே தாக்கல் செய்துள்ளது.
இந்தநிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவை ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு அங்கீகரிக்கவில்லை.
இந்தநிலையில் அவரால் கையொப்பமிடப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்கள் சட்டவிரோதமானவை என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த மனுக்களை ஏற்றுக்கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரவரம்பு இல்லை என்று தீர்ப்பளிக்கவேண்டும் என்று மனுதாரர் உயர்நீதிமன்றிடம் கோரியுள்ளார்
Post a Comment