Header Ads



றிசாத் மீதும், மஸ்தான் மீதும் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு

எமது பிரதேசத்திற்கு ஒவ்வாத கொங்கிரீட் வீடுகளை காட்டி ஏழ்மையில் உள்ள எமது மக்களை மஸ்தான் எம்.பி ஏமாற்ற பார்க்கின்றார். அதனை நாம் தடுத்து நிறுத்துவோம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது பாராளுமன்ற உறுப்பினரால் கொங்கிரீட் வீடுகள் வன்னியில் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது தொடர்பில் கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஏற்கனவே பொருத்து வீடுகளை ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்காலத்தில் கொண்டு வருகின்ற போது முழுமையாக எதிர்த்து நாம் நிறுத்தினோம். அதேபோல் இந்த விடயத்திலும் மக்களுக்கு ஒவ்வாத வீட்டுத்திட்டங்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதனை தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம். 

பாராளுமன்றத்திலும் இது தொடர்பில் ஒரு விவாதத்தினை கேட்டு இந்த திட்டங்களை முறியடிப்பதற்கான ஏற்பாட்டை கட்டாயமாக செய்வோம்.

வீடில்லாத எங்கள் மக்களுக்கு இந்த வீடு கூட இல்லாமல் இருக்கின்றோமே என்ற கருத்து வரலாம். ஆனால் அந்த வீட்டுக்குள்ளே வாழ முயடியாத நிலை காணப்படும். ஏனென்றால் எங்களுடைய நாட்டைப் பொருத்தவரையில் உஷ்னத்துடன் கூடிய வெயில் காலத்தில் எமது பிரதேசத்தில் அதிகமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். 

அவ்வாறான நிலையில் வெப்பத்தினை உறிஞ்சி உள்ளே வைத்துக்கொள்ளும் நிலையைத்தான் இந்த வீடுகள் செய்துகொண்டிருக்கின்றது. வெளிநாட்டில் சாத்தியமான விடயம் எங்கள் நாட்டில் சாத்தியமற்ற விடயமாகும். எனவே மக்கள் விரும்புகின்ற வீட்டுத்திட்டத்தினையே நாம் பெற்றுக்கொடுக்க முயற்சிப்போம்.

மஸ்தானை பொருத்தமட்டில் மீண்டும் தமிழர்களுடைய வாக்கை அபகரிக்கலாம் என எண்ணுகின்றார். வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லீம்கள் எங்களுடைய சகோதரர்கள் என்றாலும் அவர்கள் இன்று அதிகளவான வீடுகளை கொண்டிருக்கின்றார்கள். பரம்பரை பரம்பரையாக வீடுகள் இருக்கின்ற நிலையிலும் ரிசாட் பதியுர்தீன் உட்பட மஸ்தானும் தங்கள் சமூகத்திற்கு அமைச்சர்களாக இருந்து அதனை பெற்றுக்கொடுக்கின்ற நிலை தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

எமது மக்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள். வீடில்லாமல் இருக்கின்ற இந்த சூழலை பயன்படுத்திக்கொள்ள மஸ்தான் முற்படுகின்றார். எங்கள் மக்களின் ஏழ்மை மற்றும் இல்லாத நிலையை வைத்து இவர்கள் ஏமாற்றுகின்ற நிலையை அனுமதிக்க முடியாது. 

ஆகவே அவர்கள் எமது மக்களிடம் வாக்கு கேட்பதாக இருந்தால் இவ்வாறு ஏமாற்ற வேண்டாம். உண்மையை சொல்லி வாக்கு கேளுங்கள் அவர்கள் நிராகரிப்பார்கள் என தெரிவித்தார்.

1 comment:

  1. ஐயா, முதலில் மஸ்தான் அவர்களுடனும் அரசுடனும் பேசி மக்களுக்கும் பிரதேச சூழ்நிலைகளுக்கும் ஏற்ற வீடுகளைப் பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் மக்கள் பிரதிநிதி மட்டுமல்ல; ஒரு கட்சியின் தலைவரும்கூட. எனவே உங்கள் கருத்துக்களை அரச மட்டத்திலுள்ள அனைவரும் கேட்டே ஆக வேண்டும். அதை விடுத்து அறிக்கைகள், சவால்கள் விடுவது எவருக்கும் பயன் அளிக்கப்போவதில்லை.

    ReplyDelete

Powered by Blogger.