26 ஆம் திகதி, 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தவும்
தேசிய பாதுகாப்பு தினம் நாளை மறுதினம் (26) நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.
சகல அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களிலும் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்காக வியாழக்கிழமை (26) காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரையில் இரண்டு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்துமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவூட்டும் வகையில், 2005ஆம் ஆண்டு அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக, டிசெம்பர் 26ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக வருடாந்தம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, அன்றைய தினம் மத அனுஷ்டானங்களுக்கும் அனர்த்தம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்குமே முன்னுரிமை அளிக்கப்படுமென அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான நிகழ்வு காலி மாவட்டத்தில் பெரலிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபிக்கு முன்னால் காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
Post a Comment