அபினந்தன் பாகிஸ்தானினால், இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்
அபினந்தனை வரவேற்க இந்திய விமானப்படை உயர் அதிகாரிகள் குழு இன்று காலை டெல்லியில் இருந்து வாகாவுக்கு புறப்பட்டு சென்றது. அதுபோல அபினந்தனின் பெற்றோர் வர்தமான்-டாக்டர் ஷோபா மற்றும் உறவினர்களும் டெல்லியில் இருந்து விமானத்தில் அமிர்தசரசுக்கு புறப்பட்டு சென்றனர். அங்கிருந்து காரில் வாகா எல்லைக்கு சென்றனர்.
இதற்கிடையே, இன்று காலை பாகிஸ்தானில் இருந்து அபினந்தன் விடுவிக்கப்பட்டார். 35 வயது நிரம்பிய அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று முன்தினம் சிறைபிடித்ததும் எல்லையில் இருந்து ராவல்பிண்டிக்கு அழைத்து சென்று இருந்தனர். அங்கு ராணுவ முகாமில் அவர் தங்க வைக்கப்பட்டு இருந்தார்.
அங்கு வைத்துதான் அவரிடம் பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் பேசினார்கள். நேற்றும் அவர் அங்குதான் வைக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், இன்று மதியம் அவர் ராவல்பிண்டியில் இருந்து லாகூர் நகருக்கு பலத்த பாதுகாப்புடன் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து சாலை மார்க்கமாக பாகிஸ்தான் அதிகாரிகள் வாகனங்கள் புடைசூழ வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டார்.
இன்று மாலை வாகா எல்லை வந்தடைந்த அபினந்தனை இந்திய மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். பின்னர் பாகிஸ்தான் அதிகாரிகள் முறைப்படி இந்தியாவிடம் மாலை ஐந்தரை மணியளவில் ஒப்படைத்தனர். பிரபாகரன், ஆர்.ஜி.கே.கபூர் ஆகியோரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டார்.
அபினந்தனின் விடுதலை தொடர்பாக இந்திய விமானப்படை ஏர் மார்ஷல் இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களுக்கு விரிவாக பேட்டியளிக்க உள்ளார்.
Post a Comment