மகிந்தவினால் உயர் நீதிமன்றத்தில் சட்டவிளக்கம் கோரவோ, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவோ முடியாது
19 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணியும் அமைச்சருமான கலாநிதி விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இப்படியான நிலைமையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்று உயர் நீதிமன்றத்தில் சட்டவிளக்கத்தை கோர ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது.
எனினும் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஒருவருக்கு மாத்திரமே இந்த விடயம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் சட்ட விளக்கத்தை கோர முடியும் எனவும் விஜேதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் இரண்டு முறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, 18வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து, மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் நோக்கில், தேர்தலை அறிவித்து போட்டியிட்டார்.
2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட்ட அவர், ஜனாதிபதியாக பதவி வகித்து கொண்டே, அந்த தேர்தலில் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment