Header Ads



மானிப்பாயில் தனியே வாழ்ந்த பெண், பிச்சைக்காரர்களினால் வெட்டிக் கொலை


யாழ்ப்பாணம், மானிப்பாய், சங்கரப்பிள்ளை பிரதேசத்தில் இன்று காலை பெண் ஒருவர் கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சம்பவத்தின் பின்னர் சந்தேகத்தின் பேரில் அந்த வீட்டிற்கு பிச்சை எடுக்கச் சென்ற 35 வயதுடைய நபர் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம், மானிப்பாய், சங்கரப்பிள்ளை வீதியில் இன்று (28) வியாழக்கிழமை காலை இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

கத்திக் குத்துக்கு இலக்காகி கந்தையா லீலாதேவி வயது 69 என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் பற்றி தெரியவருவதாவது, 

உயிரிழந்த பெண் அந்த வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளதுடன், சமையல் வேலை பார்ப்பதற்காக வயோதிப பெண் ஒருவரும் அந்த உயிரிழந்த பெண்ணுடன் இருக்கின்றார். 

இன்று வியாழக்கிழமை காலை சுமார் 8 மணியளவில் பிச்சைக்காரன் ஒருவர் வீட்டிற்குச் சென்று பிச்சை கேட்டுள்ளார். அப்போது, அந்த மூதாட்டி 100 ரூபா காசு கொடுத்துள்ளார். அந்த காசை வாங்கிக்கொண்டு போன பிச்சைக்காரன் 30 நிமிடங்களின் பின்னர் மீண்டும் அந்த வீட்டிற்குச் சென்று மூதாட்டியை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சமையல் வேலை பார்ப்பதற்காக இருந்த வயோதிப பெண் அந்த மூதாட்டியை வந்து பார்த்த போது, மூதாட்டி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், இரத்தத்துடன் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த வயோதி பெண், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். 

அந்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்குச் சென்ற மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன்போது, மல்லாகம் நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தைப் பார்வையிட்டதுடன், சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். 

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட வவிசாரணையின் போது, யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட சுமார் 35 வயதுடைய ஜெயனாந்தன் சுதர்சன் என்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட நபரிடம் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கொலைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டுள்ளது சி.சி.டி.வி காணொளிகளைப் பெறுவதற்கான நீதிமன்ற அனுமதியைப் பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மானிப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

No comments

Powered by Blogger.