இறைவன் விதித்த இறை கட்டளையை இதயத்தால் ஏற்றே, முஸ்லிம் பெண்கள் “அபாயா” அணிகின்றனர்
மீண்டும் தொடரும் அதே வரலாற்றுத் தவறு
-சுபைதா கமால்தீன்-
கடந்த வாரம் புதன்கிழமை திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியின் பெற்றோர்களும் பழைய மாணவிகளும் ஒரு ‘விசித்திரமான’ ஆர்ப்பாட்டத்தைச் செய்து பத்திரிகை வாயிலாகத் தங்கள் ‘மறைமுகத்தை’ வெளிச்சமிட்டு காட்டியுள்ளனர்.
நல்ல ஒழுக்கமுள்ள பெண்கள் தம் அங்கங்களை மறைத்துக்கொண்டு அடங்கியிருக்கவே விரும்புவர். இதையே மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் இலக்கணம் வகுத்து ‘இப்படித்தான் வாழவேண்டும்’ என இறைவன் விதித்த இறை கட்டளையை இதயத்தால் விரும்பி ஏற்றே முஸ்லிம் பெண்கள் “அபாயா” அணிகின்றனர். படிப்பிக்கும் ஆசிரியைகளும் இதில் உள்ளடங்குவர்.
பிறரின் கலாசாரத்தைக் களங்கப்படுத்துவதோ இஸ்லாமிய கலாசாரத்தை திணிப்பதோ சமயப் பிரசாரமோ அவர்களின் உள்நோக்கம் அல்ல. அதனால்தான் முஸ்லிம் கல்வி வரலாற்றில் ஆடைகள் மூலம் இதுவரை எந்தப் ‘புரட்சி’யும் எந்த ஊரிலும் எந்தப் பாடசாலையிலும் நடந்ததாக எந்தத் தடயமும் இல்லை. இனிமேலும் நிச்சயம் வராது என நம்பலாம்.
இது இப்படியிருக்க,
அறிவார்ந்த சமூகத்தின் சிந்தனைக்கு விருந்தாக கீழ்வரும் சம்பவத்தை பரிமாறிக்கொள்ள விழைகின்றேன். சமீபத்திய பல்கலைக்கழக வகுப்பொன்றில் பட்டதாரி சட்டத்துறை மாணவர்களுக்கும் பேராசிரியருக்குமிடையே ஒரு கலந்துரையாடல் நடந்திருக்கிறது. மாணவர்களில் பல மதத்தினரும் இருந்துள்ளனர். ஒவ்வொருவரும் தத்தம் மத சிந்தனைகளைப் பேராசிரியருடன் பரிமாறிக் கொண்டுள்ளனர். முஸ்லிம் மாணவர்களின் நேரம் வந்திருக்கிறது. முஸ்லிம் மாணவன் எழுந்து “நான் முஸ்லிம்களின் அபாயா ஆடை பற்றி பேச விரும்புகிறேன். பேசலாமா” எனப் பேராசிரியரைப் பார்த்து கேட்க. அவர் “தாராளமாக பேசலாம்” என அனுமதி வழங்கவே முஸ்லிம் மாணவன் கீழ்வருமாறு பேசலானான்.
“ஆடை அணிவதில் காலத்திற்கு காலம் நாம் மாறி மாறியே வந்திருக்கிறோம். வளர்ச்சி கண்டுள்ளோம். இதை ஏற்றுக்கொள்கிறோமா?” எனக் கூறி சற்றே நிறுத்தியுள்ளான். கலந்துரையாடலில் கலந்து கொண்டோர் ‘ஆம்’ என ஒப்புக் கொண்டுள்ளனர். தொடர்ந்து முஸ்லிம் மாணவன் பேசலானான்.
“ஆதியில் மனிதன் நிர்வாணமாக அலைந்து திரிந்தான். பின்னர் இலை குழைகளால் மறைத்துக் கொள்ளலானான். பஞ்சு– நூல்– நெய்தல் என மனிதனின் அறிவு வளர, வளர அந்த வளர்ச்சியை ஆடைகளில் பிரதிபலிக்கச் செய்தான். நிர்வாணமாக அலைந்த மனிதன் படிப்படியாக தன்னை தன் அவயவங்களை மறைத்து ஆடை அணியலானான். இது மனித வளர்ச்சியை நாகரிக உயர்ச்சியை எடுத்துக்காட்டியது”
“முஸ்லிம்கள் தம் சமயத்தைப் பின்பற்றி ஆடை அணியலாயினர் மற்றவர்கள் ஆங்கிலேயரைப் பின்பற்றி ஆடை அணியலாயினர். முஸ்லிம்கள் தம்மை மறைத்து ஆடை அணிவது வளர்ச்சியின் அடையாளம். ஆங்கிலேயரை பின்பற்றுவோர் ஆடைக்குறைப்பு செய்து கற்காலம் நோக்கிச் செல்கின்றனர்” எனக்கூறி மாணவன் அமர மற்றவர்கள் அமைதியாயினர்.
பிரித்தானியாவில் ஒரு கிறிஸ்தவ நண்பர் தன் முஸ்லிம் நண்பரிடம் பேசிய உரையாடலைப் பார்ப்போம்.
தெருவில் போய்க்கொண்டிருந்த ஒரு கிறிஸ்தவப் பெரியார் தன் முஸ்லிம் நண்பரை சந்திக்க நேரிட்டபோது சேமநலன் விசாரணையைத் தொடர்ந்து “உங்கள் பெண்கள் ஏன் தங்களை மூடி மறைத்து அபாயா அணிகின்றனர். அப்படி அணிவது பெண்களின் சுதந்திரத்தைப் பாதிக்கவில்லையா?” எனக் கேட்கிறார். உடனே அந்த முஸ்லிம் நண்பர் எதுவும் பேசாமல் பக்கத்தே இருந்த கடையொன்றில் இரண்டு டொபிகளை வாங்கி வந்துள்ளார். அதில் ஒன்றின் மேலுறையை கிழித்து கீழே போட்டுள்ளார். அதில் மண்துகள்கள் ஒட்டிக்கொண்டன. அதைக் கீழே குனிந்து எடுத்து இரண்டு டொபிகளையும் தன் கிறிஸ்தவ நண்பரிடம் காட்டி ஒன்றை எடுக்கும்படி கூறியுள்ளார்.
கிறிஸ்தவ நண்பரோ மண் ஒட்டிய டொபியை எடுக்காமல் மேலுறை சுற்றிய மற்ற டொபியை எடுத்துள்ளார். உடனே முஸ்லிம் நண்பர் “பார்த்தீர்களா? போர்த்திய டொபியே சுத்தமானது. திறந்த டொபி அசுத்தமானது என புரிகிறதல்லவா?” எனக்கூறி விளக்கவே கிறிஸ்தவ நண்பர் அமைதியானார்.
மேற்படி சம்பவமும் உரையாடலும் உணர்த்தும் சிந்தனைகள் அறிவார்ந்த சமூகத்திற்கு ஆசிரிய குழாத்திற்கு அர்ப்பணம்.
தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை நன்கு புரிந்துள்ள தமிழ் தலைமைகள் இது விடயத்தில் மௌனம் அனுஷ்டிப்பது மீண்டும் அவர்கள் தவறான பாதையிலேயே பயணம் செய்கின்றனர் என்பது ஆழ்ந்து யோசிப்போருக்குப் புரிந்துவிடும்.
இப்படித்தான் 1990 அக்டோபர் 30 ஆம் திகதி யாழ். மண்ணில் பன்னெடுங் காலமாகப் பைந்தமிழையே பேசி சுவாசித்து வந்த தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்தை வெறுங்கையுடன் இரண்டு மணிநேர அவகாசத்தில் வெளியேற்றிய இனசுத்திகரிப்பின்போது இதே மண்ணின் இடதுசாரி இதயங்கள், துறைபோகக் கற்ற அறிஞர்கள், கல்விமான்கள், அறிவுஜீவிகள் அனைவரும் மௌனம் காத்தனர். இதன் விளைவை காலம் உணர்த்தியது. மலர வேண்டிய வெற்றி, மங்கிப்போவதற்கு இந்த ஆளுமைகளின் தலைமைகளின் மௌனம் வழிசமைத்தது.
ஒரு சிறுபான்மை இனம் தனது உரிமைகளின் வெற்றிக்காக பெரும்பான்மை இனத்துடன் போராடும்போது தன்னை விட சில விகிதங்களே குறைவான இன்னொரு சிறுபான்மை இனத்தை கண்ணியப்படுத்த– அரவணைக்க மனமில்லை என்றால் என்னவென்று சொல்வது. இன்றும் அதே மௌனம் – மனநிலை தொடர்கிறது. அபாயா எதிர்ப்புக்கு அடிப்படை உண்மை காரணம் எதுவுமில்லை. அதனாற்றான் அபத்தமான காரணங்களை எல்லாம் அரங்கேற்றி நிறுவப் பார்க்கின்றனர்.
இன்றைய மௌனத் தவறு எதிர்காலத்தில் என்னென்ன பாதகங்களை பிரசவிக்கப் போகின்றதோ என்பதைக் காண காலம் காத்திருக்கின்றது. எந்த மதமானாலும் தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் வாழ பிரார்த்திப்போமாக.
Post a Comment