கோதாபயவின் வெற்றிக்கு, முஸ்லிம்களின் ஆதரவு தேவையில்லை
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாராயின் சிங்கள பெரும்பான்மை மக்களின் ஆதரவு மாத்திரம் போதுமானது. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவு தேவையில்லை என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கோதாபய ராஜபக் ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கும் நிலைப்பாட்டிலே உள்ளனர். இவர்களின் தீர்மானத்திற்கு எமது இயக்கத்தின் உறுப்பினர்கள் பூரண ஆதரவினை வழங்குவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
தற்போது நாட்டில் சர்வாதிகார ஆட்சியும், தான்தோன்றித்தனமான முறையற்ற நிர்வாகங்களுமே அனைத்து துறைகளிலும் இடம்பெற்று வருகின்றன. தேசிய கலாசாரம் தொடர்ந்து அழிவு நிலையிலே காணப்படுகின்றது. இவற்றிற்கெல்லாம் நிரந்தரத் தீர்வு கிடைக்கப்பெற வேண்டுமாயின் பலமான ஆட்சியாளன் ஆட்சிக்கு வரவேண்டும்.
தேசிய அரசாங்கத்தின் இறுதி அத்தியாயம் 2020 ஆம் ஆண்டுடன் முடிவடைந்து விடும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக் ஷவை களமிறக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலே கூட்டு எதிரணியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் உள்ளனர்.இதன் மூலம் எதிர்காலத்தில் பாரிய மாற்றங்கள் தோற்றம்பெறும்.
கோதாபய ராஜபக் ஷ ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவு தேவையற்றதாகவே காணப்படுகின்றது. நாட்டில் பெரும்பான்மை மக்களின் ஆதரவினை அடிப்படையாகக் கொண்டே வெற்றிபெற முடியும். முறையற்ற நிர்வாகத்தினை மேற்கொள்ளும் தேசிய அரசாங்கம் தோற்றம் பெறுவதற்கு முக்கிய காரணம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவுகள் 2015 ஆம் ஆண்டு ஒருதலைப்பட்சமாக கிடைக்கப்பெற்றமையே.
தற்போது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே இன நல்லிணக்கம் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. சிறுபான்மை மக்களை நம்பி கடந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ செய்த தவறினை மீண்டும் எவரும் செய்ய கூடாது. பெரும்பான்மை மக்களின் ஆதரவினை அடிப்படையாகக் கொண்டே 2020 ஆம் ஆண்டு தேர்தலில் பெற்றிபெற முடியும்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்றால் அவர்கள் தொடர்ந்து அரசாங்கத்திற்கு தமது தேவைகளை மையப்படுத்தி அழுத்தங்களை பிரயோகிப்பார்கள். தற்போது வடகிழக்கு மக்களின் பிரச்சினைகள் சர்வதேச மட்டம் வரை தாக்கம் செலுத்தி வருகின்றது. தேசிய அரசாங்கமும் தேர்தலின் போது அனைவருக்கும் வாக்குறுதியளித்து தற்போது எவரது விருப்பத்தினை நிறைவேற்றுவது என்ற தொடர்பில் முரண்பட்டு கொண்டுள்ளது.
சிறுபான்மையின மக்கள் சீரிய சிந்தனைகளுடன் நாட்டின் நலன் கருதி 2020 ஆம் ஆண்டு தீர்வு காண எண்ணினால் கூட்டு எதிரணியினருக்கு ஆதரவு வழங்குவார்கள். மக்களின் வாக்குகளை பெறும் நோக்கில் தேசிய அரசாங்கம் முன்வைத்த பொய்யான வாக்குறுதிகளை போன்று கூட்டு எதிரணி ஒருபோதும் பொய்யான வாக்குறுதிகளை முன்வைத்து சிறுபான்மை மக்களை ஏமாற்றாது என தெரிவித்தார்.
-Vidivelli
கற்பனை உலகின் அரசியல் பெற்றியை நாடி முன்னோக்கிச் செல்லும் கற்பனைவாதிகளின் கோட்பாடு.
ReplyDeleteகற்பனை உலகின் அரசியல் வெற்றியை நாடி முன்னோக்கிச் செல்லும் கற்பனைவாதிகளின் கோட்பாடு.
ReplyDeleteGood to know this before the election. This stupid doesn't want Muslims or Tamil's votes and they will not fulfill our aspirations.
ReplyDeleteயார் ஆட்சியமைத்தாலும் தமிழர்கள் ஆதரவு கொடுப்பதில்லை. ஆனாலும் இது நாட்டுக்கு நல்ல விடயம் தான்.
ReplyDeleteஆனால், முஸ்லிம் மக்களே நீங்கள் இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயந்துவீடாதீர்கள். உங்கள் தலைவர்கள் லேசுபட்டவர்கள் இல்லை. சிங்களவர்களின் காலில் விழுந்து, கெஞ்சி, வணங்கி, ஆட்சியில் ஒட்டிகொள்வார்கள்.