Header Ads



யார் இந்த, அன்வர் இப்ராஹீம்...?

அன்வர் இப்ராஹீம் ஓர் அரசியல்வாதி மட்டுமல்ல, அவரொரு அரசியல் சிந்தனையாளரும் கூட. அமெரிக்காவினுடைய ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளராகவும் இடைக்காலத்தில் பணிபுரிந்திருக்கிறார். மட்டுமன்றி, பல்வேறு சர்வதேச பல்கலைகழகங்களில் வருகைதரு விரிவுரையாளராகவும் கடமை புரிந்திருக்கிறார். கடந்த இரண்டு தசாப்த்த காலங்களுக்கும் மேலாக சர்வதேச அரசியலிலும் , முஸ்லிம் உலக அரசியலிலும் பேசுபொருளாக மாறிய எல்லா விவாதங்களிலும் தனது கருத்தைப் பதிவு செய்வர்.. குறிப்பாக, நாகரீகங்களுக்கிடையிலான மோதல் , கிழக்குலக மற்றும் மேற்குலக அரசியல் விழுமியங்களுக்கிடையிலான மோதல் , இஸ்லாமும் , ஜனநாயகமும் மற்றும் சர்வதேச அரசியல் விழுமியங்களும் இஸ்லாமிய சிந்தனையும் போன்ற தலைப்புகளைச் சூழ இடம்பெற்ற உரையாடல்களில் அன்வர் இப்ராஹீமின் கருத்துக்கள் தாக்கரமானவை.

உதாரணமாக, மேற்குலக அரசியல் விழுமியங்களான ஜனநாயகம் , சிவில் சமூகம் மற்றும் மனித உரிமைகள் போன்றன கிழக்குலக அரசியல் விழுமியங்களுடன் உடன்பட்டு வரமாட்டது என தென்கிழக்காசிய அரசியல் புள்ளிகளும் , புத்திஜீவிகளும் விவாதித்த போது, அதனை வித்தியாசமான கோணத்தில் எதிர்த்து நின்றவர் அன்வர் இப்ராஹீம். அதாவது, நாகரீகங்களுக்கிடையிலான உரையாடலை ஏற்படுத்துவதிலும் , பரஸ்பர ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதிலும் 'அரசியல் விழுமியங்களுக்கு' காத்திரமான பங்கிருக்கிறது. இரண்டு நாகரீகங்கள் பொது அரசியல் விழுமியங்களில் உடன்படுவதானது, அவற்றுக் கிடையிலான இடைவெளியை குறைப்பதற்கு நியாயமாக பங்களிப்புச் செய்யும் காரணியாகும் என அன்வர் விவாதித்தார். பௌத்த , கம்பூஷியஸ் மற்றும் இஸ்லாமிய பாரம்பரியங்களை மையப்படுத்தி கிழக்குல-மேற்குலக அரசியல் விழுமியங்கள் : முரண்பாடுகளும், உடன்பாடுகளும் (Western and Asian values) தொடர்பான அன்வரிற்கும் , தென்கிழக்காசிய அரசியல் சிந்தனையாளர்களுக்கும் இடையில் தொடர்ந்த அத்தகைய உரையாடல்கள் சுவாரஷ்யமானவை.

இவைபோக, இஸ்லாமிய சிந்தனையைப் புனர்நிர்மாணம் செய்தல் தொடர்பான உரையாடல்களிலும் ஆழ்ந்து பங்களிப்புச் செய்தவர் அன்வர். அதற்காக கலாநிதி அப்துல் ஹமீத் அபூஸூலைமான் , இஸ்மாஈல் பாருகி மற்றும் தாஹா ஜாபிர் அலவானி போன்ற முன்னணி இஸ்லாமிய சிந்தனையாளர்களுடன் இணைந்து செயற்பாட்டார். இறுதியில்,இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனத்தின் (IIIT) ஸ்தாபக உறுப்பினராகவும், அதன் போஷகராகவும் பணிபுரிந்து வருகிறார். இவ்வாறு, சர்வதேச புத்திஜீவித்துவ உரையாடல்கள் மற்றும் இஸ்லாமிய சிந்தனைசார் விவாதங்கள் என இரண்டு தளங்களிலும் தொழிற்பட்டவர் அன்வர் இப்ராஹீம்.

இத்தணைக்கும் அப்பால், சுதந்திரத்திற்கு பிற்பட்ட மலேஷிய அரசியலில் 'எதிர்ப்பு அரசியல்' என்ற சொல்லிற்கு வரைவிளக்கணத்தை தேடிக் கொடுத்தவரும் அவர்தான். அதாவது, ஆறு தசாப்;த்த கால அரசியல் வரலாற்றில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் தொடர்ச்சியாக ஆட்சி செய்து வந்த அம்னோ கட்சிக்கு எதிராக வீதிக்கு இறங்கியவர். இன்னும், அதிகார சக்திகளுக்கெதிராக எதிர்கட்சியரசியலை தோற்றுவித்து, அதனை நிறுவனமயப்படுத்தி , உளவியல் ரீதியாக அதனைப் பலப்படுத்தியவர் அன்வர் இப்ராஹீம். விளைவாக,, நவீன மலேஷியாவில் பல்லின சமூகங்களாலும் தமது Icon ஆக அவர் மதிக்கப்படுகிறார்.

மொத்தத்தில், இஸ்லாமிய சிந்தனை பலப்படுத்தல் , இஸ்லாமிய இயக்கங்களை நெறிப்படுத்தல் , தேசிய அரசியலிற்கு தலைமை தாங்குதல் , பல்லின சமூக சூழலில் அரசியல் செய்தல் மற்றும் சர்வதேச சமூகத்துடன் உரையாடல் செய்தல் என பல்வேறு வித்தியாசமான தளங்களில் உழைக்கும் அரிதிலும் அரிதாக கண்டு கொள்ள முடியுமான 'சர்வதேச இஸ்லாமியாதி' அன்வர் இப்ராஹீம்.

-Zacky Fouz-

No comments

Powered by Blogger.