சவூதி கைவிட்டதனால், சதொசவிடமிருந்து பள்ளிவாசல்களுக்கு நேரடி பேரீச்சம்பழ விநியோகம்
முஸ்லிம்களின் நோன்பு கால பாவனைக்காக எதிர்வரும் மூன்று தினங்களில் 250 மெட்ரிக்தொன் பேரீச்சம்பழங்களைப் பகிர்ந்தளிப்பதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமய விவகார அமைச்சும் சதொச நிறுவனமும் இணைந்து மேற்கொண்டுள்ளன.
பேரீச்சம்பழங்கள் முஸ்லிம் சமய விவகார அமைச்சு வழங்கியுள்ள பட்டியலுக்கு அமைவாக பள்ளிவாசல்களுக்கு சதொச நிறுவனத்தால் நேரடியாக விநியோகிக்கப்படவுள்ளன.
நோன்பு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம்களுக்கு உடனடியாக பேரீச்சம்பழம் விநியோகிக்க வேண்டியுள்ளதால் சதொச நிறுவனம் உள்ளூர் சந்தையிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்ட பேரீச்சம்பழங்களைக் கொள்வனவு செய்யவுள்ளது.
முஸ்லிம்களுக்கு இலவசமாக பேரீச்சம்பழம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் பேரீச்சம்பழம் விநியோகம் தொடர்பில் சதொச நிறுவனத்தின் தலைவர் மொஹமட் ரிஸ்வான் ஹமீமை ‘விடிவெள்ளி’ தொடர்பு கொண்டு கருத்து வினவியபோது, அவர் பின்வருமாறு பதிலளித்தார்.
250 மெட்றிக்தொன் பேரீச்சம்பழத்தை கொள்வனவு செய்வதற்கு சதொச நிறுவனத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நோன்பு ஆரம்பிக்கப்பட்டுவிட்டதால் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பேரீச்சம்பழம் இறக்குமதிசெய்து விநியோகிப்பதென்றால் நீண்டகாலம் எடுக்கும். நோன்பு காலத்துக்குள் இறக்குமதி செய்துகொள்ள முடியுமா என்பது சந்தேகமே.
இதனால் உள்ளூர் சந்தையில் தற்போது கையிருப்பிலுள்ள இறக்குமதி செய்யப்பட்ட பேரீச்சம்பழம் 250 மெட்றிக்தொன் கொள்வனவு செய்து விநியோகிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கென கேள்விப்பத்திரம் கோரப்பட்டு பேரீச்சம்பழ மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டு அவற்றின் தரம் பரிசோதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சமய விவகார அமைச்சு, பாவனையாளர் அதிகார சபை, சதொச நிறுவன அதிகாரிகள் குழு பேரீச்சம்பழ மாதிரிகளை ஆராய்ந்து அனுமதியளித்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் உள்ளூர் சந்தையில் தரமான பேரீச்சம்பழங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
இன்னும் மூன்று தினங்களில் பேரீச்சம்பழம் பள்ளிவாசல்களுக்கு நேரடியாகவே விநியோகிக்கப்படும். விநியோகம் முஸ்லிம் சமய விவகார அமைச்சு வழங்கியுள்ள பள்ளிவாசல்களின் பெயர் பட்டியலின்படியே இடம்பெறும் என்றார்.
சவூதி அரேபியா அரசாங்கம் வருடாந்தம் புனித நோன்பு அன்பளிப்பாக பேரீச்சம்பழங்களை இலவசமாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் இவ்வருடம் சவூதியின் அன்பளிப்பு வழங்கப்படவில்லை.
முஸ்லிம் சமய விவகார அமைச்சு கடந்த 6 மாதங்களுக்கு முன்பே பேரீச்சம் பழங்களை காலதாமதமின்றி வழங்குமாறு சவூதி அரேபியாவை கடிதம் மூலம் கோரியிருந்தும் அது வழங்கப்படவில்லை. இதனையடுத்தே பேரீச்சம்பழம் கொள்வனவு செய்யப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளது.
கடந்த வருடம் சவூதி அரசாங்கம் 150 மெட்றிக்தொன் பேரீச்சம்பழங்களை இலங்கைக்கு இலவசமாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுடன் கலந்துரையாடியதன் பின் கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவைப்பத்திரம் ஒன்றினைச் சமர்ப்பித்து 250 மெற்றிக்தொன் பேரீச்சம்பழம் கொள்வனவு செய்வதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவையிடமிருந்து பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
-Vidivelli
Post a Comment