முஸ்லிம்களில் அதிகமானோர் 40 வயதிற்குள், மரணிக்கும் நிலை உருவாகியுள்ளது - கலாநிதி ஹாரிஸ்
முஸ்லிம் சமூகத்தில் இளவயது மரணங்கள் பெருகி வருவது சமூகத்தின் கவனத்திற்குள்ளாக வேண்டும் என்று பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் பாதிஹ் கலாபீடத்தின் பணிப்பாளருமான கலாநிதி எச்.எல்.எம். ஹாரிஸ் தெரிவித்தார்.
உடுநுவர மீவலதெனிய மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற பைதுல்மால் நிதியத்தின் அங்குரார்ப்பண வைபவத்தில் விசேட பேச்சாளராகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். பள்ளிவாசல் தலைவர் ஓ.எல்.ஏ. ஆதம்லெப்பை தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் வணிகத்துறை பயிற்சியாளரும் ஆலோசகருமான எம். பஹ்மி பாரூக் மற்றும் அக்குறணை பைதுல்மால் நிதியத்தின் தலைவர் ஈ.எஸ்.எச்.எம். இஸ்ஸதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.இங்கு கலாநிதி எச்.எல்.எம். ஹாரிஸ் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
முஸ்லிம் சமூகத்தில் இளவயது மரணங்கள் அதிகரித்து வருகின்றன. எமது சமூகத்தில் அதிகமானோர் நாற்பது வயதிற்குள் மரணிக்கும் நிலை உருவாகியுள்ளது. கடந்த வருடம் ஜாமிஆ நளீமிய்யாவுக்கு நேர்முகப் பரீட்சைக்கு வந்த மாணவர்களில் 30 சதவீதமானோரின் தந்தையர்கள் நாற்பது வயதிற்குள் மரணித்தவர்கள் என்பது அதிர்ச்சிக்குரியதாகும். இது சமூகத்தின் கவனத்திற்குள்ளாக வேண்டும்.
சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பைத்துல்மால் நிதியம் அவசியம். இது சமூக மாற்றத்திற்கான ஓர் அடிப்படையாகும். சமூகத்தைப் பற்றி சிந்தித்து திட்டமிட்டு செயற்படும் நிறுவனங்களால் மட்டுமே சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தவும் முடியும். சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு சமூகத்தில் ஒரு சாரார் சமூகப் பிரச்சினைகளை ஆராய்ந்து திட்டமிட்டு செயற்படுதல் அவசியம்.
சமூகப் பாதுகாப்பு அல்லது சமூக உத்தரவாதம் என்பது சமூகத்தின் அடிப்படைப் பணியாகும். இது பற்றி அல்குர்ஆனும் ஹதீஸும் அதிகளவில் பேசியுள்ளன. சமூகப் பாதுகாப்பு அல்லது சமூக உத்தரவாதத்தை உறுதிப்படுத்துவது சமூகக் கடமை மட்டுமல்ல சமூகப் பொறுப்புமாகும். சமூகத்தில் தனிமனிதர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாது இறைசிந்தனை , தக்வா பூரணப்படுத்தப்பட மாட்டாது.
“ஈமான் கொண்டவர்களே, நீங்கள் சுஜூத் செய்யுங்கள், நன்மையான காரியங்களில் ஈடுபடுங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” என்று அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. சமூகப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கின்றவர்கள் அல்லாஹ்தஆலாவினால் தெரிவு செய்யப்பட்ட மனிதர்கள் ஆவர். சமூகப் பணிகளில் ஈடுபடுவது என்பது அல்லாஹ்தஆலா அருளிய அருளாகும்.
முஸ்லிம் சமூகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவரின் துன்பங்களில் மற்றைய முஸ்லிம் பங்குகொள்வான். இதற்கு அடிப்படையாக பைத்துல்மால் நிதியம் அமைகின்றது. உலகில் ஒரு முஸ்லிம் மற்றைய முஸ்லிமுக்கு பிரயோசனமுள்ளவனாக வாழ்வது அவசியம். இப்பண்பு முஸ்லிமின் அடிப்படைப் பண்பாகும். நாம் மற்றவர்களுக்கு உதவும்போது அல்லாஹ்தஆலாவின் உதவி எமக்குக் கிடைக்கின்றது.
சமூகத்தை பைத்துல்மால் நிதியம் மூலம் பராமரிக்க முடியும் என்பதால் பைதுல்மால் நிதியத்தில் சமூகம் கவனம் செலுத்த வேண்டும். ஒரு முஃமின் சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் அவன் முஃமினாக இருக்க முடியாது என்று ஸூரத்துல் மாஊன் இயம்புகின்றது. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவன் சமூக விடயங்களில் கவனம் செலுத்துவான். ஒரு முஸ்லிம் நல்ல காரியங்களில் தன்னால் செலவு செய்ய முடியாத சந்தர்ப்பத்தில் மற்ற மனிதனை செலவு செய்யத் தூண்டுவது அவசியம். அல்லாஹ்வை நம்புபவன் சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவான்.
சமூகப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு அல்லாஹ்தஆலாவினால் தெரிவு செய்யப்பட்ட நல்ல மனிதர்களூடாக நடக்கும். அல்லாஹ் மனிதர்களுக்கு செல்வத்தை கொடுப்பதன் நோக்கம் செல்வம் அல்லாஹ்வின் அடியார்களின் நலனுக்கு செலவு செய்யப்பட வேண்டும் என்பதனாலாகும். சமூகத்திற்கு பயன்படுத்தப்படும் செல்வம் தொடரும். இச்செல்வம் பயன்படுத்தப்படாத போது அவற்றை அல்லாஹ்தஆலா எம்மிடமிருந்து எடுத்து மற்றவர்களிடம் ஒப்படைப்பான். எமது செல்வம் எமது திறமைகளால் பெற்றுக் கொள்ளப்பட்டதல்ல. இச்செல்வம் அல்லாஹ்வினால் தரப்பட்டதாகும் என்பதை மனதிற்கொள்ள வேண்டும்.
சமூகத்தில் வாழும் பலவீன மனிதர்கள் தான் சமூத்திற்கு ரிஸ்க் கிடைக்க காரணமானவர்களாவர் என்பது இஸ்லாமிய கண்ணோட்டமாகும். இதில் ஏழைகள், விதவைகள், அனாதைகள், வயோதிபர்கள், நோயாளிகள், விசேட தேவையுடையோர் உள்ளடங்குவர். எமக்கு அல்லாஹ்தஆலாவின் உதவிகள் கிடைக்க சமூகத்திலுள்ள பலவீனமானவர்கள் அடிப்படையாக உள்ளனர். பைதுல்மால் நிதி அடிப்படையில் பலவீனமானவர்களுக்கான நிதியாகும். இம்மனிதர்கள் புறக்கணிக்கப்படும் போது அல்லாஹ்தஆலாவின் உதவி எவ்வாறு கிடைக்கும் என்பது பற்றி சிந்திக்க வேண்டும். எனவே, பலவீனமான மனிதர்கள் பற்றி அதீத கவனம் செலுத்துவோம்.
மனிதர்களில் சிறந்தவன் மனிதர்களுக்குப் பிரயோசனமானவன் என்பது நபிமொழியாகும். ஒரு முஸ்லிமின் துன்பங்களை நீக்கும்போது அல்லாஹ்தஆலா அவனின் துன்பங்களை இம்மையிலும் மறுமையிலும் நீக்குவான். முஸ்லிம் சமூகத்தில் ஒருவருக்கு ஏற்படும் துன்பத்தில் மற்றைய முஸ்லிம் பங்கெடுப்பான். ஒரு முஸ்லிமின் உடலில் ஒரு அங்கத்தில் ஏற்படும் பாதிப்பு ஏனைய அங்கங்களைப் பாதிக்கும். எமது நாளாந்த கருமங்களை சதகாவுடன் ஆரம்பிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். ஒரு முஸ்லிமின் அடிப்படை பண்புகளில் ஒன்று மற்றவர்களுக்குப் பிரயோசனமானவனாக வாழ்வது என்ற அடிப்படையில் பைதுல்மால் நிதியத்தின் செயற்பாடுகள் சிறந்ததொரு முன்மாதிரியாகும்.
இந்நாட்டு முஸ்லிம்கள் பல்லினங்கள் மத்தியில் வாழ்வதால் சகவாழ்வு என்ற விடயம் முக்கியத்துவம் பெறுகின்றது. எனவே எமது வாழ்வியலில் சகவாழ்வை உறுதிப்படுத்துவதற்கு பைதுல்மால் நிதியத்தைப் பயன்படுத்த முடியும்.
எனது கலாநிதி ஆய்வுக்காக நாட்டில் பல விகாரைகளுக்கு சென்று பௌத்த தேரர்களை சந்தித்தேன். இதில் நான் கண்ட அனுபவம் பௌத்தர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள் சுயநலவாதிகள் என்ற மனப்பாங்கைக் கொண்டுள்ளனர். இம்மனப்பாங்கை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நாம் பெரும்பான்மை சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றி அவர்களின் உள்ளங்களைக் கவர வேண்டும். இதன் மூலம் சகவாழ்வை சாத்தியப்படுத்தலாம். முஸ்லிம் சமூகம் குறுகிய வட்டத்திற்குள் வாழ முடியாது. இவ்வட்டத்திற்குள் இருந்து வெளியேறுவதற்கு பைதுல்மாலைப் பயன்படுத்துவோம்.
இந்நாட்டிற்கு வந்த அபுல் ஹஸன் அல் நக்வி என்ற அறிஞர், “இந்நாட்டில் தஃவாவுக்கான வாயில்கள் மூடப்பட்டாலும் அஹ்லாக்குடைய வாயில்கள் திறந்து விடப்பட்டுள்ளன” என்று கூறினார். எமது நடத்தைகள் , பண்புகள் மூலம் இஸ்லாம் தொடர்பான பிழையான புரிதல்களை மாற்றியமைக்க முடியும். எனவே, பைதுல்மால் வேலைத்திட்டத்தில் முஸ்லிமல்லாதோரும் கவனம் செலுத்த வேண்டும்.
இஸ்லாம், மற்றவர்களில் தங்கி வாழ்வதை விரும்புவதில்லை. எமது தேவைகளுக்கு மற்றவர்களை எதிர்பார்ப்பதை விரும்புவதில்லை. இஸ்லாம் உழைப்பை ஊக்குவிக்கின்றது. நாம் கையேந்துபவர்களாக அன்றி கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். செல்வம் மற்றும் வசதிவாய்ப்புகள் இருந்தால் மட்டும் செலவு செய்வது என்பதல்ல. செல்வம் மற்றும் வசதிவாய்ப்புகள் இல்லாத வேளைகளிலும் மற்றவர்களுக்கு செலவு செய்தால் வசதி வாய்ப்புக்கள் வரும் போது செலவு செய்வதற்கான எண்ணம் ஏற்படும்.
பைதுல்மால் சதகா மூலம் நாம் பயன்பெறுவது எப்படி என்பது பற்றி சிந்திக்கக் கூடாது. சமூகத்தில் பலவீனமானவர்களை பலப்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் பலமானவர்களை வளர்த்து விடுவதற்கும் பைதுல்மால் நிதியத்தைப் பயன்படுத்த முடியும். இந்நாட்டு முஸ்லிம்கள் வெளிநாட்டு நன்கொடைகளை எதிர்பார்ப்பது மிக மோசமான பண்பாகும் என்று எண்ணுகின்றேன். எமது சமூகத்திலுள்ள செல்வந்தர்களின் நிதி எமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளப் போதுமானவையாகும்.
எமது சமூகம் செல்வந்தர்கள் மூலம் சமூகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவில்லை என்பவதற்கு சிறந்த உதாரணம் சமூகத்திற்குரிய ஊடகமொன்று இதுவரை உருவாக்கிக் கொள்ளாமையாகும். எமக்கு மத்தியில் நளீம் ஹாஜியார் போன்ற எத்தனையோ நளீம் ஹாஜியார்கள் உள்ளனர். ஆனால் நளீம் ஹாஜியாரிடம் காணப்பட்ட மனம் இவர்களிடம் இல்லை என்பது கவலைக்குரியததாகும்.
சமூகத்தின் வயிற்றுப்பசிக்கு மட்டும் பைதுல்மால் உதவாது சமூகத்தின் சகல தேவைகளையும் நிறைவு செய்வதில் பங்காற்ற வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் நோய்களில் ஒன்று போதைப்பொருள் பாவனையாகும். இப்போதைப்பொருள் பாவனையிலிருந்து இளைஞர்களை மீட்டெடுப்பதற்கு பைதுல்மாலைப் பயன்படுத்துவது அவசியம். பெரும்பான்மை சமூகத்திற்குள் வாழும் முஸ்லிம்கள் முன்னேறுவதற்குரிய ஒரே ஆயுதம் கல்வி மட்டுமதாகும். எமது பொருளாதாரங்கள் அழிக்கப்படும் போது கல்வியால் மட்டுமே எழுச்சியடைய முடியும்.
சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை செல்வந்தர்களால் மட்டும் பெற்றுக்கொடுக்க முடியாது. எனவே, சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் புத்திஜீவிகள், அரசியல்வாதிகள், நிர்வாகிகள் உட்பட சகலரும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்றார். விடிவெள்ளி
Post a Comment