"இனவாதத் தீயும், இலங்கையின் எதிர்காலமும்"
(பேராசிரியர் M.S.M.ANAS - பேராதனை பல்கலைக்கழகம்)
சர்வதேச வர்த்தகம் தொடர்பில் இலங்கையின் நிலைவரங்களையும் சட்ட ஒழுங்குமுறைகளையும் ஆராய்வதற்காக கடந்த வாரம் இலங்கை வந்திருந்த ஐரோப்பியப் பாராளுமன்ற குழுவினர் (INTA) ‘கண்டி கலவரத்தின்போது வழங்கப்பட்ட பாதுகாப்பு திருப்தியற்றது. இதைத் தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளது. அனைத்து சமூகங்களுக்குமிடையிலும் நல்லுறவுகளை உறுதிப்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கண்டி கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டுத் தண்டனை வழங்கப்பட வேண்டும். அதேபோல் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்காத கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்தவர்கள் இலங்கை அரசை எச்சரித்துள்ளனர்.
சட்ட ஆட்சிக்கும் பன்மைச் சமூக உறவுகளுக்கும் மதிப்பளிக்கும் அவசியத்தை இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகம் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டி உள்ளது. கண்டியில் குழப்பங்கள் நடந்த இடங்களுக்குச் சென்று பார்வையிட்ட பின்னர் தான் ஐரோப்பிய ஒன்றியக்குழு தனது கருத்துக்களை முன்வைத்துள்ளது.
சர்வதேச சமூகம் அதன் செயற்பாடுகளை முன்னெடுக்கலாம். அல்லது அதில் தாமதங்கள் நிகழலாம். நாட்டில் சிறுபான்மைக்கு எதிரான குறிப்பாக, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். அதை எப்படி சாதிக்கலாம்? அதற்கான சமாதான வழிமுறைகள் என்ன? என்பதை முஸ்லிம்களும் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரும் புரிந்து செயற்படும் தேவை இன்று எழுந்துள்ளது.
1915 இல் இருந்து முப்பதுக்கும் அதிகமான சிறிய, பெரிய முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களை இந்த நாடு சந்தித்துள்ளது. பொருளாதார காரணிகளும் இன, மத மோதல் உணர்வுகளும் சிங்கள– முஸ்லிம் மோதல்களுக்கும் கலவரங்களுக்கும் காரணமாக இருந்துள்ளன. 1915 ஆம் ஆண்டு கலகத்தில் இக்காரணிகளைத் தெளிவாகக் காண முடியுமாயினும் வேறுபட்ட பரிமாணங்களும் இக்கலகத்தில் இடம்பெற்றிருந்தன.
அது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடந்த கலகம். தேசிய உணர்வு முக்கியமாகச் சிங்களத் தேசிய உணர்வு தீவிரமாக மேலெழுந்த காலப்பகுதி அது. தமிழ் மற்றும் முஸ்லிம்களின் வரலாறுகள் திரிபுபடுத்திச் சொல்லப்பட்டதோடு அவர்கள் வந்தேறு குடிகளாகவும் நாட்டைச் சூறையாடுபவர்களாகவும் சித்திரிக்கப்பட்டனர். (இது பற்றிப் பின்னர் விரிவாகப் பார்ப்போம்) அதாவது, நாட்டின் தேசிய எழுச்சியில் சிறுபான்மை மக்களை உள்வாங்காத அல்லது தேசத்தின் எதிரிகளாகக் காட்டும் பரப்புரைகளும் கருத்தியல்களும் முன்வைக்கப்பட்டன.
சிங்கள மக்களின் ஒருமைப்பாட்டையும் மேற்கத்தைய எதிர்ப்பையும் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்துச் சென்ற பௌத்த சமயப் புத்துயிர்ப்பு வாதியான அநகாரிக தர்மபால (1864–1933) கட்டியெழுப்பிய தேசியவாதக் கருத்தியல் ஐக்கிய இலங்கைக்குச் சாதகமானதாக இருக்கவில்லை. தேசிய ஒருமைப்பாட்டிலும் தேசிய எழுச்சியிலும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் உள்ளீர்க்கப்படவில்லை.
தேசிய எழுச்சியில் பௌத்த மத புத்தெழுச்சியை அநகாரிக தர்மபால ஒன்று கலந்தார். மத உணர்வு கலந்த தேசியத்தையும் மேற்கத்தைய எதிர்ப்பையும் அடிமட்ட மக்கள் வரை அவர் கொண்டு சென்றார். இலங்கையில் மட்டுமன்றி உலக பௌத்த எழுச்சியும் சமயப் புத்துயிர்ப்பும் அவரது பிரதான இலட்சியங்களாகும். உலகளாவிய பௌத்த மதப் பரப்புரையின் முதலாவது தலைவர் என்றும் அநகாரிக போற்றப்படுகிறார். பிற்காலத்தில் அவர் புனித தேவமித்த தர்மபால என்ற பெயருடன் பௌத்த துறவியானார்.
தேசத்தின் விடுதலைக்கான அநகாரிகவின் சிந்தனைகளையோ சமயப் புத்துயிர்ப்பு நடவடிக்கைகளையோ நாம் குறைகூறவில்லை. நிகழ்ந்து கொண்டிருந்த ‘தேச அரசு’ (Nation State) என்ற நவீன அரசியல் கட்டமைப்பை அவர் கவனத்தில் கொள்ளவில்லை. பல்லின சமூகங்களையும் பல மொழிகளையும் கொண்ட இலங்கையின் அரசியல் எதிர்காலத்தை அவரது சிந்தனைகள் பிரதிபலிக்கவில்லை. இலங்கையின் அரசியல் பயணமும் இனங்களுக்கிடையிலான ஐக்கியமும் சீர்குலைக்கப்பட்டது பற்றியே நாம் சிந்திக்கிறோம்.
இனங்களுக்கிடையிலான பாரிய இடைவெளியையும் வெறுப்பையும் இது தோற்றுவித்தது. விரைவில் தீவிர இனவாத இயக்கங்களின் தாரக மந்திரமாக இவை வடிவம் பெற்றன.
அநகாரிக தர்மபாலவின் எழுத்துக்களை வாசிக்கும்போது 18 ஆம் நூற்றாண்டில் ‘சிலனீஸ்’ (இலங்கையர்) என்றால் ‘சிங்ஹலீஸ்’ (சிங்களவர்) என்றே எடுத்துக் கொள்ளப்பட்டதாக மைக்கல் ரொபர்ட்ஸ் கூறுகிறார். பின்னர் ‘எக்ஸத் பிக்கு பெரமுன’ இயக்கத்தினர் சிறு முதலாளிய சக்திகளுடன் இணைந்து ‘சிங்களம் மட்டும்’ கோரிக்கையைப் பரப்பினர். 1956 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்க தனது கட்சிக்கும் அரசியலுக்கும் சிங்களம் மட்டும் கொள்கைகளை தவிர்க்கமுடியாத அடிப்படைக் கோட்பாடாக்கினார்.
பண்டாரநாயக்கவின் வெற்றி பெரிய புரட்சியாகச் சித்திரிக்கப்பட்டது. நாட்டின் முன்னேற்றத்திற்கான கூறுகள் அந்த வெற்றியில் இருந்திருக்க முடியும். ஆனால் டி.எஸ்.சேனநாயக்க தலைமையில் பலவீனமானதாகவோ நொறுங்கக்கூடிய நிலையிலோ இனங்களுக்கிடையிலான ஒரு ஐக்கியம் கட்டி எழுப்பப்பட்டது. சிறுபான்மை இனங்களையும் உள்ளடக்கிய அரசியல் ரீதியான 'ஐக்கிய இலங்கை' அல்லது ‘ஐக்கிய இலங்கையர்’ என்ற ‘நவீன தேச அரசு’க்கான அடிப்படைகளை இனவாதம் சிதறடித்தது. இலங்கையர் ஐக்கிய தேசிய உணர்வு பற்றிப் பேசியோர் தேசத் துரோகிகளாக்கப்பட்டனர்.
சிறுபான்மையினர் பார்வையில் மட்டுமின்றி நவீன ஜனநாயக, நவீன தேச அரசு என்ற பார்வையிலும் நாடு பெரும் தோல்விகளைச் சந்தித்தது. 1915 சிங்கள, முஸ்லிம் கலவரமும் குறைந்தது. 1920 களிலிருந்து தமிழர் தரப்பில் முன்வைக்கப்பட்ட மொழி உரிமை, சுயாட்சிக் கோரிக்கைகளும் நாட்டை நெறிப்படுத்தும் அரசியல் தலைமைகளில் எந்தத் தாக்கத்தையும் செலுத்தவில்லை.
மத சார்பற்ற அரசுக்குரிய அம்சங்கள் இலங்கையின் அரசியல் சாசனத்தில் இடம்பெற்றிருந்தபோதும் பௌத்தமே நாட்டின் பிரதான சமயமாக்கப்பட்டது.
1972 ஆம் ஆண்டில் புத்த சமயம் அரசு சமயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலிமை பெற்றது. மகாசங்கத்தினரும் பௌத்த மத உயர்பீடத்தினரும் இதற்கு தலைமை தாங்கினர். 1956 இல் சிங்களம் மட்டும் கொள்கை பூதாகரமாக்கப்பட்டது. மொழி அடிப்படையில் நாடு இரு கூறாக்கப்பட்டது. 1972 இல் பௌத்தம் மட்டும் கோஷம் அரசியல் அரங்கை அதிர வைத்தது.
பௌத்த மதத்திற்கு நிகராக வேற்று மதங்களுக்கு இடமளிக்கக்கூடாது. பௌத்த இராஜ்ஜியம் உருவாக்கப்பட வேண்டும். இலங்கையின் அரச மொழியாக சிங்கள மொழியை மட்டுமே அசியல் சாசன ரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்று மகாசங்கத்தினர் பிரகடனம் செய்தனர்.
ஒரு மொழியும் ஒரு சமயமும் மட்டுமே அரச அங்கீகாரத்தையும் நாட்டின் முதன்மை அந்தஸ்தையும் பெறக்கூடிய நிலை ஆபத்தானது என்றும் ஐக்கிய இலங்கை என்ற அடிப்படையை அது சீர்குலைப்பதோடு இலங்கையின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்றும் சிங்கள இடதுசாரித் தலைவர்களும் ஐக்கிய இலங்கையை நேசித்த தலைவர்களும் கூறிய எச்சரிக்கை வார்த்தைகள் இனவாதத் தீயில் கருகிச் சாம்பலாகின. நாடு யுத்தத்தை நோக்கித் தள்ளப்படும் என்பது 1956 களிலேயே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது.
இறுதியில் 'இலங்கைக் குடியரசு பௌத்த மதத்துக்கு முதன்மை ஸ்தானம் வழங்குதல் வேண்டும்….. அதேநேரத்தில் பௌத்த மதத்தைப் பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாதலும் வேண்டும்.' என்ற பிரகடனத்தை எமது யாப்பும் வெளியிட்டு பல்லின சமூகத்தைப் பிரதிபலிக்கும் தனது பொறுப்பிலிருந்து நீங்கிக்கொண்டது. இன்றுவரை இனவாதம் நாட்டின் எல்லா முன்னேற்றங்களையும் தடுக்கும் சக்தியாகவும் மறைவாகவும் வெளிப்படையாகவும் செயற்படுகிறது. 1956 ஆம் ஆண்டு புரட்சியானது இலங்கையை எல்லா இன மக்களினதும் நாடாக்கும் முயற்சியில் தோல்வி அடையச் செய்துள்ளது. பௌத்தம் மட்டும் என்பதிலிருந்து இது விருட்சமாகி உள்ளது. 1956 இன் இலட்சியங்கள், வீரவிதானவிடமும் சோமஹிமியிடமும் கையளிக்கப்பட்டன. மைக்கல் ரொபர்ட்ஸ் கூறுவது போல் சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்திய ஜாதிக சிந்தனையிலும் மஹிந்த சிந்தனையிலும் அநகாரிகவிலிருந்து போசணை பெற்றுவரும் இக் கருத்தியலே செல்வாக்குச் செலுத்துகிறது. இனவாத நெருக்கடி நாட்டை பெரும் பின்னடைவுகளுக்கு இட்டுச் செல்லும் முக்கிய காரணமாகின்றது.
இலங்கையில் தேரவாதம் அல்லது தேரவாத பௌத்தம் இன்று இன மோதல்கள் தொடர்பில் பெரும் சவால்களை எதிர்நோக்கி உள்ளது. 2009 இல் உள்நாட்டுப்போரில் தமிழ் ஆயுதத் தரப்பினர் முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இனவாத– மதவாத நெருக்குவாரங்களும் தீவிர சமயவாத வன்முறைக்குழுக்களின் உருவாக்கமும் நடவடிக்கைகளும் அதிகரித்தன. சிஹல உறுமய, ஜாதிக ஹெல உறுமய, பொதுபலசேனா, ராவணா பலய, சிங்கள ராவய, ஜாதிக சிந்தனய இயக்கம், சிங்கலே அமைப்பு அவற்றின் உப குழுக்கள் எனப் பல சமயத் தீவிரவாத இயக்கங்களை இனங்காட்ட முடியும். கண்டி கலவரத்தை நிகழ்த்துவதில் முக்கிய பங்கேற்றிருந்த ‘மஹாசோன்’ குழுவினரும் இந்த வரிசையைச் சேர்ந்த அணியினர்தான்.
புதிய இனவாத, இன அரசியல் கோட்பாடுகளை இப்புதிய இயக்கங்கள் பெற்றிருந்தபோதும் அநகாரிக தர்மபாலவில் இருந்து தொடரும் தீவிர இன – மத வாத சிந்தனைத் தூண்டல்களே இன்றும் இவற்றின் அடிப்படைகளாக உள்ளன. ஏனைய சமயங்களுக்கும் இனங்களுக்கும் எதிரான தீவிர வெறுப்புப் பிரசாரம் வெளிப்படையாகவே இன்று பேசப்படுகிறது. வன்முறைத் தூண்டல் சம்பவங்களும் போலிப் பிரசங்க பரப்புதலும் மோதல்களும் அடுத்தடுத்து நடைபெறுகின்றன.
குறிப்பாக 2009 இன் பின்னர் தீவிர இன, மதவாதிகளின் பல்வேறு தாக்குதல்களுக்கு முஸ்லிம்கள் நேரடியாக இலக்காகி உள்ளனர். முஸ்லிம்களும் அவர்களின் சமயமும் அவர்களின் கலாசாரமும் பொருளாதாரமும் சிங்கள பௌத்த மதத்தின் இருப்பிற்கும் வளர்ச்சிக்கும் சிங்கள மக்களின் முன்னேற்றத்திற்கும் இடையூறாகவும் தடைகளாகவும் இருப்பதாக பாரிய அளவில் எதிர்ப்பு– வெறுப்பு– பரப்புரைகள் செய்யப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை நியாயப்படுத்தும் முயற்சிகளும் நடைபெறுகின்றன.
ஹலால் பிரச்சினையையும் வில்பத்து விவகாரத்தையும் இன்னும் பல விடயங்களையும் தமது கருத்துகளுக்கு ஆதரவாக இனவாதிகள் பயன்படுத்துகின்றனர். பொதுபலசேனாவும் ராவணா பலய இயக்கமும் ஹலால் பிரச்சினையை மையப்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு கலாசாரப்போரை சிங்களப் பெரும்பான்மை மக்களிடம் கட்டவிழ்த்து விட்டதை நாம் அறிவோம். இனவாதக் குழுக்கள் எதிர்பார்த்ததைவிட அதிக பலாபலன்கள் கிடைத்தன. நாடு முழுக்க வெறுப்புப் பிரசாரங்கள் கொண்டு செல்லப்பட்டன. முஸ்லிம்களுக்கு எதிரான வர்த்தகத் தடை மறைமுகமாக செயற்படுத்தப்பட்டது. தம்புள்ளை பள்ளி விவகாரம் எரியும் பிரச்சினையாக்கப்பட்டது.
குருநாகல், தம்புள்ளை, கண்டி, பேருவளை, மாவனெல்லை பிரதேசங்கள் இனங்காணப்பட்டு தாக்குதலுக்கும் மோதல்களுக்குமான சூழல்கள் இப்பிரதேசங்களில் உருவாக்கப்பட்டன. பேருவளை – அளுத்கம, பாணந்துறை – நோலிமிட் அழிவுகளுடன் அதில் வெற்றியும் காணப்பட்டது. எனினும் அப்போதைய அரசாங்கம் மௌனம் சாதித்தது. குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாட அரசு அனுமதித்தது. ‘குற்றவாளிகள் தண்டனைக்குட்படுத்தாது தப்பிச்செல்ல அனுமதிக்கும் கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும். அது ஆபத்தானது’ என்று ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டக்குழு கண்டி கலவரச் சூழலில் இக்கருத்தை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
மார்ச் கண்டி கலவரம் நான்கு நாட்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டதற்கு இரு காரணங்களைச் சுட்டிக்காட்டலாம். கலவரத்தின் பிரதான சூத்திரதாரிகளில் சிலரும் மற்றும் பல தீவிர கலவரச் செயற்பாட்டாளர்களும் பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதும் அரசாங்கம் கலவரத்தின் பின்னணியில் ஒரு சக்தியாக இயங்கவில்லை என்பதுமாகும். (எனினும் நாம் பேசவேண்டிய பல விடயங்கள் உள்ளன)
இன்றைய கலவரங்கள் புதிய பரிமாணங்களை எடுத்துள்ளன. 2009 க்கு பின்னரான கலவரங்களில் இப்பரிமாணங்கள் தெளிவான காட்சிப் பொருட்களாகி இருப்பதை நாம் மேலும் நுட்பமாக ஆராயவேண்டும்.
Post a Comment