பரபரப்பான சூழலில், கூடுகிறது பாராளுமன்றம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அரசாங்கத்திற்கும் எதிராக கூட்டு எதிரணி கொண்டு வரவிருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த பேச்சுக்கள் இடம்பெற்றுவருகின்ற பரபரப்பான சூழலில் நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடவுள்ளது.
பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது. பெரும்பாலும் நாளை செவ்வாய்க்கிழமை நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் இலங்கை அரசியலில் பெரும் நெருக்கடியான நிலை தோன்றியுள்ளது. இதன்படி ஆரம்பத்தில் தேசிய அரசாங்கத்தை கொண்டு செல்வது தொடர்பில் சிக்கலான நிலைமை ஏற்பட்ட போது தேசிய அரசாங்கத்தை தொடர்ந்து கொண்டு செல்வோம் என ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக அதன் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீரவும் சென்ற பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது கூட்டாக தெரிவித்தனர்.
அதன்பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு விடயத்திலும் அமைச்சரவை மாற்றத்திலும் அதிருப்தி கொண்டு அக்கட்சிக்குள் பெரும் உட்பூசல் எழுந்துள்ளது. இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்போவதாக அறிவித்தார். இந்நிலையில் கூட்டு எதிரணி பிரதமருக்கு எதிராகவும் அரசாங்கத்திற்ெகதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப் பிரேரணைக்கு ஐக்கிய தேசியக் கட்சியினர் ஒரு சிலரும் ஆதரவு நல்கப் போவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி நாளை மார்ச் மாதத்திற்கான பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் இவ்வாரம் நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கவுள்ளதாக கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது. பெரும்பாலும் நாளை செவ்வாய்க்கிழமை நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டு எதிரணி கையளிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறான பரப்பான சூழலில் நாளை பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன.
ஆகவே இவ்வார பாராளுமன்ற அமர்வு அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பெரும் பரபரப்பாக அமையக்கூடும் என எதிர் பார்க்கப்படுகின்றது. அதேபோன்று அம்பாறை பள்ளிவாசல் மற் றும் முஸ்லிம் உணவகங்கள் மீதான தாக்குதல் தொடர்பிலும் நாளை ஆரம்பமாகும் பாராளுமன்ற அமர்வில் அவதானத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment