ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு, எர்துகான் பதிலடி
ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளியுறவு அமைச்சர் விமர்சித்த உஸ்மானிய பேரரசின் ஆளுநரின் பெயரை அந்த நாட்டு தூதரகம் இருக்கும் வீதிக்கு துருக்கி சூட்டியுள்ளது.
613ஆவது வீதிக்கு 1916–1919இல் மதீனாவுக்கான உஸ்மானிய ஆளுநராக இருந்த பஹ்ரத்தீன் பாஷாவின் பெயரை வைக்க அங்காரா மாநகர சபை தீர்மானித்துள்ளது. அதேபோன்று ஐக்கிய அரபு இராச்சிய தூதரகத்திற்கு முன்னால் இருக்கும் 609ஆவது சாலைக்கு ‘மதீனாவின் பாதுகாவலன்’ என்று அர்த்தம் கொண்ட ‘மதீன் முதப்பி’ என்ற பெயரை சூட்டியுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளியுறவு அமைச்சர் ஷெய்க் அப்துல்லாஹ சயித் கடந்த மாதம் பதிவிட்ட டுவிட்டர் ஒன்றில், பஹ்ரத்தீன் பாஷா மற்றும் அவரது உஸ்மானிய படை மீது குற்றம் சாட்டி இருந்தார். இவர்கள் இரண்டாவது உலகப் போரின்போது மதீனாவில் உள்ள கையெழுத்து பிரதிகளை திருடியதாக குற்றம்சாட்டினார். இவர்கள் துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவானின் முன்னோர்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும் அது திருட்டு அல்ல என்று குறிப்பிட்ட எர்துவான், பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பில் இருந்து இறைத்தூதர் முஹமதுவின் புனித நினைவுச் சின்னங்களை பாதுகாக்கும் நடவடிக்கை என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
பஹ்ரத்தீன் பாஷாவை இலக்கு வைத்து ஐக்கிய அரபு இராச்சியம் கருத்து வெளியிட்டது குறித்து அந்நாட்டு தூதுவரை அழைத்து துருக்கிய வெளியுறவு அமைச்சு கடிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment