சகோதரியை தூக்கிக் கொண்டு, வீதியைக் கடந்த 13 வயது சிறுமி விபத்தில் பலி
(ரெ.கிறிஷ்ணகாந்)
கண்டி யாழ்ப்பாணம் வீதியில், நாவுல – நாலந்த வைத்தியசாலைக்கு அருகில் கார் ஒன்றினால் மோதப்பட்டு 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் மாலை தனது தாயுடன் வீதியில் சென்று சென்று கொண்டிருந்த வேளையில், இச்சிறுமி தனது ஒன்றரை வயதான சகோதரியை தூக்கிக்கொண்டு வீதியை கடக்க முற்பட்டபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் நாலந்த பிரதேசத்தைச் சேர்ந்த கௌசல்யா செவ்வந்தி (13) என்ற சிறுமி உயிரிழந்துள்ள அதேவேளை, எலிசா தருதனி என்ற ஒன்றரை வயதான, அச்சிறுமியின் சகோதரி காயமடைந்த நிலையில் மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நேரில் கண்டவர்கள் தெரிவிக்கையில், இச்சிறுமி தனது தாயின் சொல்லைக் கேட்காது வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் இவ்வாறு விபத்துக் குள்ளாகியதாக தெரிவித்துள்ளனர்.
அவதானமற்ற முறையில் குறித்த சிறுமி, குழந்தையுடன் வீதியை கடக்க முற்பட்ட வேளையில் மாத்தளையிலிருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த கார் ஒன்றினால், மோதுண்டுள்ளார். அதன்போது காரின் தடுப்புத் தொகுதி செயற்படுத்தப்பட்ட போதிலும், சுமார் 20 மீற்றருக்கு அப்பால் சென்று அக்கார் நிறுத்தப்பட்டதாகவும், அவ்வேளையில் விபத்துக்குள்ளான சிறுமியின் கையிலிருந்த குழந்தை தூக்கியெறியப்பட்டதாகவும் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் சீகிரியாவை சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். காரில் கண்டிக்கு வாடகைப் பயணமொன்றை மேற்கொண்டு மீண்டும் சீகிரியா நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில், நாவுல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் சுகத் பண்டார விஜேசுந்தரவின் உத்தரவுக்கமைய நாவுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
Post a Comment