இலங்கையிலிருந்து தங்கம் கடத்திய, ஐயப்ப பக்தர்கள் சென்னையில் கைது
கொழும்பிலிருந்து வந்த ஐயப்ப பகத்தர்கள் இருவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து, விமான நிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்த நிலையில், குறித்த இருவரும் இன்று பிற்பகல் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த இருவரிடமும் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது, அவர்களது கழுத்தில் அணிந்திருந்த மாலையில் உள்ள கருப்பு உருண்டையில் 630 கிராம் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதன், சர்வதேச சந்தை மதிப்பு 19 (இந்திய ரூபாய்) இலட்சம் என தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, மாலைகள் சுங்க பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இலங்கையிலிருந்து சென்ற பக்தர்கள் சுங்க அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், ‘‘தங்கத்தை எந்த வழியில் கடத்தி வந்தாலும், அதனை பறிமுதல் செய்வோம்’’ என அதிகாரிகள் குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த இருவரிடமும் சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
Post a Comment