செயிட் ஹூசைன் இலங்கை பற்றி அறிக்கை, ஜெனிவாவில் மார்ச்சில் விவாதம்
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் மார்ச் மாதம் 21 ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. அதேபோன்று பூகோள காலக்கிர மீளாய்வு தொடர்பான இலங்கையின் விவாதம் மார்ச் மாதம் 16ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைபெறவுள்ளது.
அந்த வகையில் இலங்கை தொடர்பான பிரதான விவாதம் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்பான தனது அறிக்கையை முன்வைப்பார். அதன்பின்னர் இலங்கை தனது தரப்பு நியாயம் சம்பந்தமான அறிக்கையை முன்வைக்கும்.
தொடர்ந்து உறுப்பு நாடுகள் இலங்கை நிலைமை தொடர்பில் இந்த விவாதத்தில் உரையாற்றவுள்ளன. அதாவது 2015ஆம் ஆண்டு ஐ.நா . மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2017 ஆம் ஆண்டு மேலும் இரண்டு வருட கால நீடிப்புக்குள்ளான இலங்கை குறித்து பிரேரணை எவ்வாறு அமுல்படுத்தப்படுகிறது என்பது தொடர்பான மீளாய்வு அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹசைனால் முன்வைக்கப்படவுள்ளது.
இதன்போது அவர் இலங்கை மீது தனது விமர்சனம் கலந்த அதிருப்தியை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது பிரேரணை நிறைவேற்றப்பட்டு மூன்று வருடங்கள் கடந்து விட்ட போதிலும் பொறுப்புக்கூறல் பொறிமுறை விடயத்தில் இதுவரை சரியான முன்னேற்றம் காணப்படவில்லை என்ற அதிருப்தியை தனது அறிக்கை ஊடாக செயிட் அல் ஹூசைன் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இவ்வாறே பொறுப்புக்கூறல் பொறிமுறை தாமதமடைந்தால் அடுத்த கட்டமாக எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பது குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் விளக்கமளிப்பார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இது இவ்வாறிருக்க இலங்கை சார்பில் இந்த விவாதத்தில் உரையாற்றவுள்ள வெளிவிவகார அமைச்சர் விபரமான ஒரு அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்யவுள்ளதுடன் 2015 ஆம் ஆண்டு ஐ.நா. பிரேரணை எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றது என்பது குறித்த விளக்கங்களை அளிக்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அதுமட்டுமன்றி இலங்கை பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுப்பது என்பதில் எவ்வாறான சவால்களை எதிர்கொள்கின்றது என்பது குறித்து வெளிவிவகார அமைச்சர் விளக்கமளிக்கவிருக்கின்றார். அத்துடன் காணாமல்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதனூடாகவும் காணாமல்போனோர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக புதிய சட்டமூலம் கொண்டுவரப்படும் என்றும் இலங்கையில் சார்பில் ஜெனிவாவில் தெரிவிக்கப்படவிருக்கின்றது.
இதேவேளை இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் செயிட் அல் ஹூசைனும் தமது அறிக்கைகளை வெளியிட்ட பின்பு உறுப்பு நாடுகள் விவாதத்தில் உரையாற்றவுள்ளனர். இதன்போது இலங்கை அரசாங்கம் விரைந்து பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டுமென்று வலியுறுத்தவுள்ளன.
அதேபோன்று சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் மனித உரிமை அமைப்புக்களும் இலங்கை தொடர்பில் பல்வேறு அறிக்கைகளை 37ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கவுள்ளன. இந்த அறிக்கைகளில் இலங்கை பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டவேண்டுமென சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தவுள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகளினால் இலங்கை குறித்த பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதில் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மற்றும் விசாரணையாளர்களின் பங்களிப்புகளுடன் பொறுப்புக்கூறல் பொறிமுறை முன்னெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல், நட்டஈடுவழங்குதல், மற்றும் மீள் நிகழாமை ஆகிய விடயங்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென அரசாங்கம் அறிவித்திருந்தது.
அந்த வகையிலேயே அரசாங்கம் எவ்வாறு இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது என்பது குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தாக்கல் செய்யவுள்ளார். இது இவ்வாறிருக்க மார்ச் மாதம் 16 ஆம்திகதி இலங்கை தொடர்பான பூகோள காலக்கிர மீளாய்வு விவாதமும் நடைபெறவுள்ளது. இதில் கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கை ஐ.நா. மனித உரிமை பேரவையில் வாக்குறுதிகள் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.
பெப்ரவரி 26ஆம்திகதி முதல் மார்ச் மாதம் 23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் தலைமையில் உயர் மட்ட தூதுக்குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர். வெளிவிவகார அமைச்சின் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் உயர் அதிகாரிகளும் இந்த தூதுக்குழுவில் இடம்பெறுவர்.
Post a Comment