திரளிமீன் கறி சாப்பிட்டவர், முள்ளு தொண்டையில் சிக்கி மரணம்
-பாறுக் ஷிஹான்-
திரளிமீனும் புட்டும் உண்ட போது அதன் முள்ளு தொண்டையில் சிக்கிய நிலையில் யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று(29) இடம்பெற்றுள்ளது.
5வீட்டு திட்டம் நாவற்குழி பகுதியினை சேர்ந்த 8பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்தவர் என பொலிஸார் கூறினர். கடந்த 19 ம் திகதி இரவு மேற்படி பெண் இரவு உணவிற்காக திரளிமீன் கறியுடன் புட்டு உண்டுள்ளார். இதன் போது மீனின் முள் தொண்டையில் சிக்கியுள்ளது.
மானிப்பாயில் உள்ள இவரது மகன் அழைத்து சென்று தனது பராமரிப்பில் வைத்திருந்ததுடன், முதலுதவிக்காக சங்காணை பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து சென்று அனுமதித்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூதாட்டி உயிரிழந்துள்ளார். இறப்பு விசாரணைகளை சாவகச்சேரி பிரதேசத்திற்கு பொறுப்பான இறப்பு விசாரணை அலுவர் இளங்கீரன் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் பிள்ளைகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
Post a Comment