ஓடும் ரயிலை திசைதிருப்ப, மாணவன் முயற்சி - பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் சேவை ரயிலை திசை திருப்பி அபாயத்தை ஏற்படுத்த முயற்சித்தார் என்ற சந்தேகத்தில் பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பேசாலை பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது,
தலைமன்னார் பியரிலிருந்து இரவு கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் இரவு 9.45 க்கு பேசாலை ரயில்வே நிலையத்தை வந்தடைந்தது.
ரயில் ஓடும் சரியான பாதையை இணைக்க முடியாத நிலையில், அதனைச் சீரமைக்க ரயில்வே அதிகாரிகள் முயற்சித்தனர்.
இருப்பினும் அது பயனளிக்காதமையால், ரயில்வே அதிகாரிகள் ரயில்வே நிலையத்திலிருந்து 300 மீற்றர் தூரத்திலுள்ள தண்டாவாளங்களை இணைக்கும் இடத்துக்குச் சென்று பார்த்தபோது தண்டாவாளங்களை இணைக்கும் இடைவெளியில் இரு பாறாங்கற்களை வைத்து இரு பாதைகளை இணைக்க முடியாதபடி செய்யப்பட்டிருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டது.
இது விடயமாக பேசாலை ரயில்வே அதிகாரி பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததனைத் தொடர்ந்து, பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.ஆர்.சிறில் தலைமையில் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று புலன் விசாரணையில் ஈடுபட்டனர். அதன் போதே குறித்த மாணவனே இவ்வாறு செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.
இச் சம்பவம் மாணவர்களிடையிலான விளையாட்டு சம்பவமாக இரவுவேளையில் நடாத்தப்பட்டதாக தெரிய வந்த போதும் இது கண்டு பிடிக்காதிருந்தால் பெரும் அபாயத்தை தோற்றுவித்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இச் சம்பவத்தால் அன்று ரயில் தாமதித்தே புறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆ.கி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது மாணவனை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வாஸ்
Post a Comment