திருகோணமலை முஸ்லிம்களின் காணி, பிரச்சினைகளை தீர்ப்பது யார்..?
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்களின் காணிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருக்கின்றன. முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முஸ்லிம் அரசியல் வாதிகள், புத்திஜீவிகள், முஸ்லிம் அமைப்புகள், துறைசார் நிபுணர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அப்பகுதி சிவில் அமைப்புகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றன.
திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கான காணி உறுதிகள் உரியகாலத்தில், உரிய முறையில் வழங்கப்படவில்லை. நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக உரித்தாவணங்கள் உரிய காலத்தில் வழங்கப்படவில்லை. அதேபோன்று தொல்பொருள் திணைக்களத்தினால் காணிகள் திடீரென எல்லைப்படுத்தப்படுகின்றன. மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகள் இவ்வாறு எல்லையிடப்பட்டு அறிவித்தல் பலகைகள் காட்சிப்படுத்தப்படுவதால் மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். வனஜீவராசிகள் திணைக்களத்தினாலும் காணிகள் திடீர் திடீரென எல்லையிடப்படுகின்றன. இதனால் தமது காணிகள் எப்போது பறிபோகுமோ எனும் அச்சத்தில் மக்கள் காலத்தைக் கடத்துகின்றனர்.
முஸ்லிம்களின் பல நூறு ஏக்கர் காணிகள் இராணுவ தேவைகளுக்காக அபகரிக்கப்பட் டுள்ளமையும் இங்கு குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டியதாகும். முஸ்லிம்களின் காணிகளில் இராணுவ முகாம்கள், கடற்படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்னன. திருகோணமலை மாவட்டத்தில் இவ்வாறு 27 முஸ்லிம் தனியார் காணிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம்களுக்குச் சொந்தமான இந்தக் காணிகளை விடுவிக்கும் விடயத்தில் இராணுவத்தினரும் அரசாங்கமும் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகளும் இதுவிடயத்தில் அசமந்தமாகவே செயற்படுகின்றனர்.
இதற்கப்பால் திட்டமிட்ட சிங்களமயமாக்கலும் அங்கு தொடர்ந்து வருகிறது. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சொந்தமான காணிகளில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டு அவற்றை ஆக்கிரமிக்கும் திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்கொண்டு செல்லப்படுகின்றன.
இவ்வாறு திருமலை மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தொடர் கதையாகிக் கொண்டே செல்கிறது. இவற்றை பிரதேச, மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டங்களும் நம் கைகளில் இல்லை என்பது துரதிஷ்டவசமானதாகும். இது தொடர்பில் முறையான கொள்கைகள் வகுக்கப்பட்டு வினைத்திறனான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் அதை யார் முன்னின்று செய்யப் போகிறார்கள் என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி.
(விடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்
ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி திருக்கோணமலை மாவட்டத்தில் 93, 441 குடும்பங்களைச் சேர்ந்த 384, 153 மக்களைக்கொண்டுள்ளது இந்த நகரம்.தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள்ஆகிய மூன்று இன மக்களும் இந்த நகரத்தில் வாழ்கின்றபோதிலும் நகரத்தில் தமிழர்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர்
ReplyDelete