திருடர்களை ஏன், இன்னும் தண்டிக்கவில்லை..?
மஹிந்த ஆட்சியின் மோசடிகள் இரண்டரை வருடங்களாக விசாரிக்கப்படாமல் இருப்பதற்கு நீதி அமைச்சரின் அழுத்தங்களே காரணமென்று அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தொம்பே - கிரிந்திவெல பஸ்தரிப்பிட திறப்பு விழா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்தது. அவன்கார்ட் மோசடி, மிக்விமான மோசடி, இது பற்றி செய்தி வெளியிட்டதால் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவுக்கு நடந்த நிலைமை குறித்து மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மத நல்லிணக்கம், ஜனநாயகம், சுதந்திரத்தை ஏற்படுத்துதல் மற்றும் கடத்தல்களை நிறுத்துதல் என்பவையும் நல்லாட்சி அரசால் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளாகும்.
தாஜூடின் கொலை தொடர்பாக விசாரணை நடத்தும் பொலிஸ் குழுவுக்கு அரச மாளிகையிலிருந்து 46 தொலைபேசி அழைப்புகள் சென்றுள்ளன.
திருடர்களை ஏன் இன்னும் தண்டிக்கவில்லை என எல்லோரும் வினவுகின்றனர். நாட்டின் நீதி அமைச்சர் தொடர்பில் பிரச்சினை இருக்கிறது. இரண்டரை வருடங்கள் விசாரணைகள் முடங்கிக் கிடப்பதற்கு நீதி அமைச்சரின் அழுத்தமே காரணம்.
திருடர்களை பிடிக்குமாறு மக்கள் ஜனாதிபதியையும், பிரதமரையும் கேட்கிறார்கள். சுதந்திரக் கட்சி அமைச்சர்களும் இதனை தான் கோருகிறார்கள். வழக்குகள் தாமதமாக நீதி அமைச்சர் தான் காரணம்.
இந்த நிலையில், இராஜினாமா செய்ய இருக்கும் நீதி அமைச்சருக்கு பதவி துறந்து செல்ல சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதியையும், பிரதமரையும் கோருவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதனூடாக எமது அரசாங்கத்தை பாதுகாத்து 2020 வரையல்ல 2025 வரை நிலைக்கச் செய்ய முடியுமென்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Post a Comment