Header Ads



புற்று நோயுடன் போராடிய இலங்கை மாணவி, வித்தியா கண் நிபுணராகிறார்..!

புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மரணத்திற்கான நாட்களை எண்ணிக்கொண்டிருந்த இலங்கை பூர்வீகத்தை கொண்ட மாணவி பட்டதாரியாகியுள்ளார்.

வித்தியா அல்போன்ஸ் என்ற மாணவி கார்டிவ் பல்கலைக்கழக கண் சிகிச்சை மருத்துவத்துறையில் இறுதி ஆண்டில் கல்வி கற்று வந்தார். எனினும் 2015ம் ஆண்டில் தீராத நோயினால் பாதிக்கப்பட்ட விதித்யா அல்போன்ஸ் மரணத்திற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார்.

25 வயதான அவருக்கு புற்றுநோய் தீவிரமடைய ஆரம்பித்தது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வித்தியாவுக்கு உடனடியாக ஸ்டெம் செல் மாற்றுச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதனை பெற்றுக் கொள்வதற்காக பொது மக்களின் உதவியை நாடி சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் வித்தியாவுக்கு பொருத்தமான ஸ்டெம் செல்களை பெற்றுக் கொள்ள முடியவில்லை. இறுதியில் தனது மகளின் உயிரை காப்பாற்றுவதற்கு வித்தியாவின் தயார் தனது ஸ்டெம் செல்களை வழங்கும் முயற்சிகளை மேற்கொண்டார்.

இதன்மூலம் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அவர் வழமையான வாழ்க்கை முறைக்கு திரும்பினர். இரண்டு வருடங்களின் பின்னர் தனது இறுதியாண்டு கற்கை நெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து பட்டதாரியாக பட்டம் பெறும் விழாவில் கலந்து கொண்டார்.

“எனது சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் கல்வி நடவடிக்கையில் கவனத்தை செலுத்துவது மிகவும் கடினமாக இருந்ததென வித்தியா தெரிவித்துள்ளார்.

நான் விரிவுரைகளுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கற்கையின் பதிவுகளைப் பயன்படுத்தி எனது சொந்த முயற்சியில் அதைச் செய்ய வேண்டியிருந்தது.

எனது பட்டம் பெறும் நடவடிக்கையில் புற்றுநோயக்கு இடமளிக்க போவதில்லை. கண் தொடர்பான வைத்திய நிபுணராகுவதே எனது கனவாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மாணவியான வித்தியா லண்டன் Walthamstow பகுதியில் வாழ்ந்து வருகின்றார். தனது கற்கையின் இறுதி நாட்களின் போது புற்றுநோயினால் பாதிக்கப்பட்டார்.

அவரது நோய் நிலைமையை அறிந்ததனை தொடர்ந்து, வித்தியாவுக்கு பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு வருடம் ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அவர் சிகிச்சைக்காக 10 மாதங்கள் செலவிட்டார்.

வித்தியாவுக்கு ஸ்டெம் செல்களை தனமாக வழங்குவதற்கு நூற்றுகணக்கானவர்கள் முன்வந்தனர். லண்டன் மற்றும் கார்டிவ்பில் உள்ள அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து பெற்ற நம்பமுடியாத உதவிகளுக்கு அவர் தனது நன்றியை தெரிவித்தார்.

கார்டிவ் பல்கலைக்கழகம் தனக்கு எதிர்பார்க்க முடியாத ஆதரவை வழங்கியதாக வித்தியா குறிப்பிட்டுள்ளார்.

“என்னுடைய அற்புதமான மேற்பார்வையாளர்கள் இன்றி எனது பட்டப்படிப்பை முடிக்கவும் எனது கனவை அடைந்திருக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். என் கதையானது கடினமான நேரத்தை கடந்து செல்ல முடியாமல் உள்ளவர்களை ஊக்குவிக்க உதவுமென நம்புகிறேன் எதுவும் சாத்தியமே.எனது கனவை அடைவதற்கு உதவிய எனது பெற்றோர் மற்றும் எனது நண்பர்களுக்கு நன்றி சொல்வதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.

கடினமான காலங்களில் நடப்பவர்கள் அனைவரும் கடவுளை நம்புங்கள், கடினமாக உழைக்கவும், எப்பொழுதும் முயற்சியை கைவிட்டுவிடாதீர்கள். இதைச் செய்ய முடியும் என்றால், எதையும் செய்ய முடியும்” என வித்தியா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை வித்தியா BSc பட்டதாரியாக பட்டம் பெற்றார். அத்துடன் ஒகஸ்ட் மாதம் முதல் முறையாக கண் நிபுணராக பதவியேற்கவுள்ளார்.

1 comment:

  1. வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete

Powered by Blogger.